படமோ, பதவியோ "வாரிசு" என்றாலே சர்ச்சையாம்.. பாஜக நினைப்பதை திமுக செய்கிறதாம்.. சீறுகிறார் சீமான்!
புதுச்சேரி: பாஜக ஆளும் மாநிலங்களை விட அவர்களின் எண்ணங்களை தமிழக அரசு செய்து வருவதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் விமர்சித்துள்ளார். பாஜகவிடம் திமுக சரணடைந்து வேலை செய்வதாகவும், பாஜக ஆட்சி செய்ய வேண்டியதற்கு அவசியமில்லாமலே அனைத்தும் திமுக செய்வதாகவும், அனைத்து திட்டங்களுக்கும் பிரதமர் மோடியை அழைத்து வருவதாகவும் சீமான் தெரிவித்துள்ளார். அதேபோல் வாரிசு படம் என்றாலும், பதவியாக இருந்தாலும் சர்ச்சை தான் என்று உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிரமாக விமர்சித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் செய்தியாளர்களுடனான வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் புதுச்சேரியில் சீமான் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், மாநில அந்தஸ்து தொடர்பாக முதலில் பேசியது நாம் தமிழர் கட்சி தான். அதன்பின்னரே ரங்கசாமி பேசினார். மாஹே, ஏனாம் வேண்டாம். புதுச்சேரிக்கு மாநில உரிமை தரக் கோரி தொடர்ச்சியாக போராடுவோம் என்று தெரிவித்தார்.
உதயநிதி இப்போது தானே வந்தாரு? நேரடியாக கோவைக்கே பிளைட் ஏறும் டெல்லி
மநீக - காங்கிரஸ் கூட்டணி
தொடர்ந்து ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் கலந்துகொண்டது பற்றிய கேள்விக்கு, காங்கிரஸ் குடும்பம் என்பதால் கமல்ஹாசனுக்கு ராகுலின் யாத்திரையில் ஈர்ப்பு இருப்பது சகஜம் தான். டெல்லிக்கு சென்று ராகுல் காந்தியுடன் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் எண்ணம் கமலுக்கு இருக்கலாம். ஆனால் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம். அரசியலில் கூட்டணி சேர்வது கொள்கைக்கு இடம் தராது. எங்களுடன் சேர்ந்து கூட்டணி அமைக்க யாரும் வர மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
ரங்கசாமி பற்றி சீமான்
தொடர்ந்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பற்றிய கேள்விக்கு, ரங்கசாமி கூட்டணி வைத்துள்ள பாஜகவிடம் மாநில அந்தஸ்துக்காக போராட வேண்டியதில்லை. காமராஜர் சீடன் என்று கூறி பாஜகவிடம் கூட்டணி வைத்த பிறகு என்ன ஆலோசனை சொல்ல முடியும். மாநில அந்தஸ்துக்காக போராடும் ரங்கசாமிக்கு ஆதரவாக கருத்து சொன்னோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரங்கசாமி உளமாற மாநில அந்தஸ்துக்கு போராடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் முதலமைச்சர் பதவியை அனுபவித்துவிட்டார். மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் போய்விட்டது என்று தெரிவித்தார்.
ஆர்.எம்.ரவி, தமிழிசை
தொடர்ந்து ஆளுநர் தலையீடு பற்றி கேள்விக்கு, இந்தியாவில் ஆளுநரே தலையீடுதான். ஆளுநர் பதவியே திரும்ப பெற வேண்டும். மக்களால் தேர்வான அரசே சட்டத்தை நிறைவேற்ற முடியாது. பாஜக இல்லாத மாநிலங்களில் உளவு பார்க்க ஆர்.என்.ரவி, தமிழிசை போன்றோர் நியமிக்கப்பட்டு மேலிடத்துக்கு தகவல் செல்வது அனைவருக்கும் தெரிந்ததுதான். காங்கிரஸ் கட்சியில் புதுச்சேரியில் இருந்தோர் சரணடைந்ததால் எளிதாக கைப்பற்ற பாஜக நினைக்கிறது.
பாஜக நினைப்பதை திமுக செய்கிறது
புதுச்சேரியில் ஆட்சியமைத்துவிட்டால் எளிதாக தமிழகத்தில் கால்பதிக்க பாஜக நினைக்கிறது. இப்போது பாஜக எதிரான நிலைப்பாட்டை அதிமுக எடுத்தாலும் தேர்தலின் போது தான் உறுதியாக கூற இயலும். அதேபோல் பாஜகவிடம் திமுக சரணடைந்து வேலை செய்கிறது. பாஜக ஆட்சி செய்ய வேண்டியதற்கு அவசியமில்லாமலே அனைத்தும் திமுக செய்கிறது.
வாரிசு பிரச்சினை
பாஜக ஆளும் மாநிலங்களை விட அவர்களின் எண்ணங்களை தமிழக அரசு செய்து வருகிறது. பாஜகவினரை விட திமுக விஸ்வாசமாகவுள்ளது. ராகுல் காந்தியுடன் கூட்டணி வைத்தாலும் அனைத்து திட்டங்களுக்கும் மோடியை தான் அழைத்து வருகிறார்கள். யாருடன் திமுக இருக்கப் போகிறது என்பதை என்னால் இப்போது சொல்ல முடியாது. அதேபோல் வாரிச படம் என்றாலும், பதவியாக இருந்தாலும் பிரச்சினை தான் என்று தெரிவித்தார்.