போராட்டம் நடத்துவது தவறு... நேரில் வாங்க பேசலாம்... கிரண்பேடி அழைப்பு
புதுச்சேரி: முதல்வரின் தர்ணா போராட்டம் சட்டத்திற்கு புறம்பானது என ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதி உள்ளார்.
ஆளுநர் மாளிகைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் முதல்வர் நாராயணசாமி அரசுப் பணிகளை அங்கு இருந்தவாறே கவனித்து வருகிறார். தர்ணா போராட்டத்திற்கு சபாநாயகர் வைத்தியலிங்கம் நேரில் ஆதரவு தெரிவித்தார்.

மேலும், தொண்டர்கள் பல்வேறு இடங்களில் ஆளுநருக்கு எதிராக உருவப் பொம்மை எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தொடர்ந்து வருவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், போராட்டக்களத்திலேயே அரசு கோப்புகளை பார்த்து கையெழுத்திட்டு வருகிறார் முதல்வர். தங்களின் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக கடந்த 7ஆம் தேதி என்னிடம் கடிதம் அளித்துள்ளீர்கள்.

இந்த கடிதம் குறித்து பரிசீலிப்பதற்கு போதிய அவகாசம் கூட கொடுக்காமல் தங்களது அமைச்சரவை சகாக்களுடன் ஆளுநர் மாளிகை வெளியே தர்ணாவில் ஈடுபட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ளார். எனினும் உங்கள் கடிதம் குறித்து நேரிடையாக ஆலோசனை நடத்துவதற்கு வரும் 21ந்தேதி காலை 10 மணிக்கு வரும்படி முதலமைச்சர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், முதல்வர் நாராயணசாமி சொல்வது போல எந்தக் கோப்பும் நிலுவையில் இல்லை என்றும், 13 ம் தேதிக்குள் பதில் தராவிட்டால் தர்ணா நடத்துவோம் என்று நாராயணசாமி எதுவும் கூறவில்லை என கூறியுள்ள கிரண்பேடி, எனது பதிலுக்குக் கூட காத்திருக்காமல் போராட்டம் நடத்துவது தவறு என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications