"கைது பண்ணுங்க".. குண்டு வீச்சு சம்பவத்தை திசை திருப்புறாராம் சீமான்.. எச்.ராஜா கடும் விமர்சனம்!
புதுச்சேரி: தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் கடந்த ஒரு சில நாட்களில் நடைபெற்றிருப்பது மாநிலம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வன்முறை சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், புதுச்சேரியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விசிக மற்றும் நாம் தமிழர் கட்சிகளை விமர்சித்து பேட்டியளித்துள்ளார்.
இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

குண்டுவீச்சு
கடந்த 22ம் தேதி கோவை காந்திபுரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் திடீரென பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த சம்பவத்தை தொடர்ந்து மதுரை, குமரி, திருப்பூர், ஈரோடு, சேலம் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை எச்சரித்திருந்தது.

கண்டனம்
ஆனாலும் இந்த குண்டு வீச்சு சம்பவங்கள் குறைந்தபாடில்லை. மறுபுறத்தில், இதுபோன்ற வன்முறை சம்பவங்களை நாங்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதனையடுத்து புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் மூத்த தலைவர், எச்.ராஜா நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

“தேச விரோதிகள்”
இது குறித்து அவர் பேட்டியில் கூறியதாவது, "தமிழ்நாட்டில் தேசவிரோதிகள், வன்முறைவாதிகள் தைரியமாக இருப்பதற்கு காரணம் இந்த திருமாவளவன், சீமான் போன்ற தீயசக்திகள்தான். இவர்கள் அரசியலில் இருப்பதற்கே தகுதியற்றவர்கள். இன்றைக்கு கோவையில் காவல்நிலையத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. SDPI, PFI ஆகிய கட்சி மற்றும் அமைப்பை சேர்ந்தவர்கள் காவல்நிலையம் முன்னர் போராட்டம் நடத்துகின்றனர். இவர்களுடன் விசிகவினர் இருக்கின்றனர்.

“கைது செய்க”
SDPI, PFI மற்றும் விசிக ஆகியவற்றிற்கு வித்தியாசமில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக விசிக மீதும், திருமாவளவன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல 'காஷ்மீர் விடுதலை இயக்க' தலைவரை அழைத்து வந்து கடலூரில் கூட்டம் போட்டவர்தானே சீமான்? தேச விரோதிதானே சீமான்? எனவே இவர் மீதும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார். ஏற்கெனவே பாஜக சார்பில், SDPI, PFI ஆகியவற்றை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது விசிக மற்றும் நாதக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications