பிஜேபியின் அதிகார வெறிக்கு புதுச்சேரி வேட்டைக் காடாகிவிட்டது.. ஜோதிமணி ட்வீட்
புதுச்சேரி : பிஜேபியின் அதிகாரவெறிக்கு புதுச்சேரி வேட்டைக் காடாகிவிட்டது. புதுச்சேரி மக்களுக்காக வருந்துகிறேன் என கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சடடமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
இதில் முதலமைச்சராக ரங்கசாமியும் மற்றும் சபாநாயகராக செல்வமும் மட்டும் பதவியேற்ற நிலையில் அமைச்சர்கள் யார் எப்போது பதவியேற்பார்கள் என்ற குழப்பம் நிலவி வந்தது.

யார் யார் அமைச்சர்கள்
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்காவும் பாஜக சார்பில் நமச்சிவாயம், சாய் சரவணகுமார் ஆகியோர் அமைச்சரவை பட்டியலில் இடம்பெற்றனர். இந்த பட்டியல் அரசிதழில் வெளியான பின்பு அமைச்சர்கள் பதவியேற்பு விழா கிட்டத்தட்ட தேர்தல் முடிந்து 55 நாட்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

அமைச்சர்கள்
ஆளுநர் மாளிகை எதிரே எளிமையான முறையில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டு லட்சுமி நாராயணன், தேனீ. ஜெயக்குமார், சந்திரபிரயங்கா, நமச்சிவாயம், சாய் சரவணகுமார் ஆகியோருக்கு அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

வேட்டைக்காடு
55 நாட்கள் கழித்து என்ஆர் காங்கிரஸ் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவை பதவியேற்றது குறித்து கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட் பதிவில். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற அரசு கொரோனாவின் 2ம் அலையை கட்டுக்குள் கொண்டுவந்து விட்டது. ஆனால் 55 நாட்கள் கழித்து இப்போதுதான் புதுச்சேரியில் அமைச்சரவை பதவியேற்கிறது. பிஜேபியின் அதிகாரவெறிக்கு புதுச்சேரி வேட்டைக்காடாகிவிட்டது. புதுச்சேரி மக்களுக்காக வருந்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

ஜோதிமணி கேள்வி
இதனிடையே ஜோதிமணி நேற்று காலை வெளியிட்டிருந்த மற்றொரு ட்வீட் பதிவில், பிரதமர் மோடி தமிழை வரவேற்பதாக கூறியது குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார். அந்த பதிவில், " பிரதமர் மோடி அவர்களின் 'மன்கிபாத்' நிகழ்ச்சியில் தமிழ் அபிமானத்தை வரவேற்கிறேன்.வெறும் வார்த்தையாக இல்லாமல் செயலிலும் காட்டுங்கள். தமிழையும்,தமிழ்நாட்டையும் உங்கள் அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது. கேந்திரிய வித்யாலயா,கீழடி முதல் கோவின் செயலி வரை தமிழுக்காக உங்களிடம் நாங்கள் போராட வேண்டியுள்ளது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications