இப்படி அரசியல் செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.. பேரறிவாளன் விடுதலை பற்றி அற்புதம்மாள் வேதனை
புதுச்சேரி: உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மரியாதைக்குரிய ஒரு கையெழுத்தை வைத்து இப்படி ஒரு கேவலமான அரசியல் செய்வார்கள் என நான் கற்பனை கூட
செய்யவில்லை என புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அற்புதம்மாள் வேதனை தெரிவித்துள்ளார்
7 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும் எனவும் வலியுறத்தியுள்ளார். ராஜீவ்காந்தி கொலையாளிகளான பேரறிவாளன்
உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு அழுத்தம் தர வலியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார்.
மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற மார்ச் 9-ம் தேதி புதுச்சேரி, சென்னை, கோவை உள்ளிட்ட 7 இடங்களில் நடைபெற உள்ள மனித சங்கலி போராட்டத்திற்கும் ஆதரவு கேட்டு அற்புதம்மாள் பயனித்து வருகிறார். இந்நிலையில் இன்று புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து
கொண்ட அற்புதம்மாள் 100-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள் தனது மகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்காக கடந்த 28 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வரும் நிலையில் நீதிமன்ற உத்தரவை காண்பித்து விடுதலையை நிராகரித்து வந்தனர்.
நான் மிகவும் மதிக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட விடுதலை செய்ய இதுவரை முன்வரவில்லை என வேதனை தெரிவித்த அவர், தமிழக ஆளுநர் கையெழுத்திட்டால் விடுதலை செய்யலாம் என்ற நிலையில் அந்த மதிப்பிற்குரிய கையெழுத்தை வைத்து இப்படி ஒரு கேவலமான அரசியல் செய்வார்கள் என
நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை என்றும், எனவே உடனடியாக 7 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதையொட்டியே ஆளுநருக்கு அழுத்தம் தர வலியுறத்தி நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் என அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.