புதுச்சேரியில் முடிவுக்கு வந்த குளறுபடி - ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் நாளை அமைச்சர்களாக பதவியேற்பு
புதுச்சேரி மாநில அமைச்சர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை பதவியேற்க உள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளது. இதன் மூலம் சுமார் 50 நாட்களாக நிலவி வந்த இழுபறிக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. ஒரு பெண் உள்பட 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
மொத்தமுள்ள 30 இடங்களில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், அவரது கூட்டணியில் இடம்பெற்ற பாஜக 6 இடங்களிலும் வென்றன. இதேபோல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 2 இடங்களிலும், திமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. இவர்களைத் தவிர சுயேட்சை வேட்பாளர்கள் 6 பேர் வென்றனர். அதிக இடங்களை பெற்ற கட்சி என்ற அடிப்படையில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னணி பெற்றது.
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கடந்த மே மாதம் 7ஆம் தேதியன்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இருப்பினும் அவரது தலைமையிலான அமைச்சரவை அமைக்கப்படாமல் இருந்தது.

பாஜக அழுத்தம்
பாஜக தங்கள் கட்சியைச் சேர்ந்த நமச்சிவாயத்துக்கு துணை முதல்வர் பதவியையும், இரண்டு அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவியையும் கேட்டு ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால், அவர்களின் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையைக் காரணம் காட்டி அந்தக் கோரிக்கையை ரங்கசாமி நிராகரித்தார்.

நியமன எம்எல்ஏக்கள்
கொரோனா தொற்றால் மருத்துவமனையில் ரங்கசாமி அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், மூன்று பேரை நியமன எம்.எல்.ஏக்களாக பாஜக நியமித்ததுடன், மூன்று சுயேட்சைகளையும் வளைத்து தன் எம்.எல்.ஏக்கள் பலத்தை 12ஆக உயர்த்தியது.

கடும் இழுபறி
ஆட்சிக்கு வந்து 50 நாட்களுக்கு மேலாகியும் அமைச்சர் பதவி தொடர்பாக கூட்டணி கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அமைச்சரவை பதவி ஏற்பதில் கடும் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அமைச்சர் பட்டியல் அடங்கிய கோப்பை முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அளித்தார்.

அமைச்சரவை பட்டியல்
இதையடுத்து தற்போது புதுச்சேரி அரசிதழில் அதிகாரப்பூர்வ அமைச்சர் பட்டியல் வெளியாகி உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார் மற்றும் சந்திர பிரியங்கா அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

சந்திரா பிரியங்கா
சந்திரா பிரியங்கா பெண் உறுப்பினர் ஆவார். அதன் மூலம் 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு பெண் புதுச்சேரியில் அமைச்சராக பதவியேற்க உள்ளார். இதேபோல் பாஜக சார்பில் நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணன் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை ஆளுநர் மாளிகை வளாகத்தில் அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

முடிவுக்கு வந்த இழுபறி
பாஜகவின் அமைச்சர்கள் பட்டியலில் நமச்சிவாயத்தின் பெயர் இடம்பெற்ற நிலையில், மற்றொரு அமைச்சர் பதவிக்கு, ஜான்குமார் மற்றும் சாய் சரவணன் ஆகியோர் இடையே போட்டி நிலவியது. ஜான் குமாரின் ஆதரவாளர்கள் என்று கூறிக் கொண்டு சிலர் புதுச்சேரி பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன், தாக்குதலிலும் ஈடுபட்டனர். இதனால், புதுச்சேரி விவகாரம் டெல்லி வரை எதிரொலித்தது. தற்போது சாய் சரவணன்தான் இந்த ரேஸில் வென்றுள்ளார். அமைச்சரவை ஞாயிறன்று பதவியேற்க உள்ளதால் 50 நாட்களுக்கும் மேல் புதுச்சேரியில் நிலவி வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications