புதுவையில் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை.. தமிழிசை தித்திப்பான அறிவிப்பு!
புதுச்சேரி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர் உள்ளிட்ட அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தமிழகத்தை போன்று புதுவையிலும் கொரோனா தொற்று ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,819 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு தினசரி பாதிப்பில் புதிய உச்சம் தொட்டது.
புதுவை நகரில் மட்டும் 1,435 பாதிப்புகள் பதிவாகியின. தினசரி உயிரிழப்பும் 18-ஐ தொட்டுள்ளது. கொரோனவை கட்டுப்படுத்த புதுவையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதுவை அரசின் இந்திராகாந்தி பட்டமேற்படிப்பு மையம் பொது மருத்துவமனையில் ரூ.1 கோடி செலவில் காற்றின் மூலம் நிமிடத்திற்கு 700 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் நிலையத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு செய்தார்.
மன வலியோடு சொல்கிறேன்... ஓரிரு நாட்களில் இன்னும் நிலைமை மோசமாகும்.. -சு.வெங்கடேசன் அவசரக் கடிதம்..!
பின்னர் நிருபர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது:- நேற்றைய தினம் புதுவையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் இளைஞர்கள் ஆவர். கொரோனா முதல் அலை 50 வயது, 60 வயதுக்கு மேற்பட்டவர்களைதான் அதிகம் பாதித்தது. ஆனால் இரண்டாவது அலை இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது. எனவே இளைஞர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சாலைகளில் தேவையில்லாமல் கூடி நிற்க வேண்டாம்.
அரசு கட்டுப்பாடுகளை விதித்தாலும் கூட பொதுமக்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும். கொரோனாவை விரட்டுவதற்காக மருத்துவ பணியாளர்கள் தங்களை அர்பணித்து சேவை செய்து வருகின்றனர்.
எனவே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர் உள்ளிட்ட அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் மொத்தம் ரூ.5 கோடிக்கு மேலான மதிப்பீட்டில் கூடுதல் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.