பெரிய சிக்கல்? "அரவணைத்துச் சென்றால் ஓகே.. இல்லைனா.." எச்சரிக்கும் புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள்
புதுச்சேரி: கூட்டணி அரசு நடைபெற்று வரும் புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரியில் இப்போது ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு நடந்து வருகிறது. கடந்தாண்டு அங்கு நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அதிகபட்சமாக என்ஆர் காங்கிரஸ் 10 இடங்களில் வென்றது. இதையடுத்து 6 இடங்களில் வென்ற பாஜகவுடன் இணைந்து புதுச்சேரியில் கூட்டணி அரசு அமைந்தது.

கூட்டணி
இத்துடன் சுயேச்சையாக வென்ற 3 எம்எல்ஏக்கள் மற்றும் 3 நியமன எம்எல்ஏக்கள் எனச் சேர்த்து பாஜகவுக்கு ஆதரவு புதுவை சட்டசபையில் 12ஆக உயர்ந்தது. ஆட்சி அமைத்து சுமார் 15 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இப்போது அங்கு ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. கடந்த 23ஆம் தேதி பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ அங்காளனின் உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்த பிரச்சினை தொடங்கியது.

போராட்டம்
சட்டசபை வளாகத்திலேயே முதல்வருக்கு எதிராகப் போராட்டத்தை நடத்திய அங்காளனுக்கு பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரமும் நேரிலேயே சென்று ஆதரவு அளித்தார். அந்தக் கூட்டத்தில் புதுச்சேரிக்கு பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக நியமிக்கப்பட வேண்டும் என்று கூறி அதிர்ச்சியைக் கிளப்பினார் அங்காளன். இது என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் முதலில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து இது தொடர்பாக முறையிட்டனர்.

சபாநாயகர்
மேலும், சபாநாயகர் செல்வத்திடம் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இந்த விவகாரத்தை எடுத்துச்சென்றனர். அப்போது இரு தரப்பு எம்எல்ஏக்களையும் கசப்புகளை மறந்து செயல்பட அவர் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பிற்கு முன்னதாக என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் தனியாக ஆலோசனை நடத்தி உள்ளனர். அதில் எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட்ஜான்குமார், அங்காளன், சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டாக தெரிகிறது.

விமர்சனம்
இதனிடையே அந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் முதல்வரின் செயல்பாடுகள் குறித்து எம்எல்ஏக்கள் கடுமையாக விமர்சித்து உள்ளனர். அந்த வீடியோவில் சுயேச்சை எம்எல்ஏ அங்காளன், "மறுதேர்தல் வைத்தால் நின்று வெல்ல முடியுமா என என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கேட்கிறார்கள். வைக்கட்டும் எல்லா தொகுதிகளிலும் மறுதேர்தல் வைக்கட்டும். அப்போது யார் வெல்கிறார்கள் என பார்க்கலாம். அப்போதுதான் அவர்கள் யார் காலில்ல எல்லாம் விழுந்து வென்றார்கள் எனத் தெரியும்.

அரவணைத்துச் சென்றால்
என்னுடைய தொகுதியில் கூட அவர்கள் (என்ஆர் காங்கிரஸ்) ஒரு வேட்பாளரை இறக்கி இருந்தார். முதல்வரே பிரசாரம் கூடச் செய்தார். அதைத் தாண்டி தான் நான் வென்றேன். இப்படியிருக்கும்போது, எதோ அவர்களால் வென்றேன் என எப்படிச் சொல்ல முடியும்" என்கிறார். அப்போது குறுக்கிடும் பாஜக எம்எல்ஏ ஜான்குமார், "பாஜக எம்எல்ஏக்களை அரவணைத்துச் சென்றால் ஆட்சி சிறப்பாக இருக்கும். தன்னை ஆதரிக்கும் நபர்கள் அவர்கள் சுயேச்சையாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட முதல்வர் ரங்கசாமி கார் கொடுக்கிறார்.

மரியாதை கூட இல்லை
ஆனால், பாஜகவை ஆதரிக்கும் சுயேச்சை எம்எல்ஏகளுக்கு எதுவுமே கிடைப்பதில்லை. தனது ஆதரவைத் தக்கவைப்பது மட்டுமே ரங்கசாமியின் ஒரே குறிக்கோள். பாஜவுக்கு ஆதரவு தரும் சுயேச்சைகளுக்குக் குறைந்தது சேர்மன் பதவியைத் தரக் கூடாதா" எனக் கேட்கிறார். அப்போது அங்காளன், "பதவியை எல்லாம் விடுங்க. குறைந்தபட்ச மரியாதை கூட இல்லை" என்கிறார். அப்போது கல்யாணசுந்தரம், "கூட்டணிக்குப் புறம்பாகச் சுயேச்சையாக எனக்கு எதிராகவே வேட்பாளரை இறக்கினார். ஆனாலும் வெல்ல முடியவில்லை" என்கிறார்.

ஆபத்து?
என்னதான் சபாநாயகர் செல்வம் கசப்புகளை மறந்து செயல்பட வேண்டும் எனக் கூறினாலும், அங்குள்ள என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விரிசல் பெரிதாகும்பட்சத்தில் அங்கு நடக்கும் கூட்டணி அரசுக்கே ஆபத்தாக முடிய வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications