அந்த சாதி **.. குளத்தில் பெண்களை விரட்டிய கும்பல்! ஈர துணியோடு காட்டுக்குள்..புதுக்கோட்டையில் தான்!
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரம் ஏற்படுத்திய அதிர்ச்சி நீங்குவதற்குள், குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பட்டியலின பெண்களை விரட்டி அடித்ததோடு அவர்களது ஆடைகளை முட்காட்டிற்குள் வீசியதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியல் இனத்து மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மற்றும் ஆய்வு செய்வதற்காக ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை செய்த போது அந்த பகுதியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு பட்டியல் இனத்து மக்களை அனுமதிக்கவில்லை என்ற புகார் எழுந்தது.
குடிநீர் தொட்டியில் மலம்.. புதுக்கோட்டை சாதி வெறியர்களை கைது செய்யாதது ஏன்? ஹென்றி திபேன் கேள்வி
குடிநீரில் மலம்
மேலும் அங்கு உள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை பயன்படுத்தப்படுவதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பட்டியல் இனத்து மக்களை மாவட்ட ஆட்சியர் கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு செய்தார். மேலும் அந்த டீக்கடை உரிமையாளர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார் இதேபோன்று கோயிலில் சாமி ஆடி தரக்குறைவாக பேசிய மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டார்
சமரச பேச்சுவார்த்தை
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து சமுதாய மக்களையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அனைத்து சமுதாய மக்களும் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து அப்பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மீண்டும் அதிர்ச்சி
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரம் ஏற்படுத்திய அதிர்ச்சி நீங்குவதற்குள், குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பட்டியலின பெண்களை விரட்டி அடித்ததோடு அவர்களது ஆடைகளை முட்காட்டிற்குள் வீசியதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கூத்தங்குடி கிராமத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
அத்துமீறல்
அந்த கிராமத்தில் வசிக்கும் பட்டியல் இன மக்கள் அப்பகுதியில் உள்ள பெருங்காடு கண்மாயில் குளித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த சிலர் அந்தப் பெண்களை இந்த கண்மாயில் நீங்கள் குளிக்க கூடாது என மிகவும் ஆபாசமாகவும் சாதியின் பெயரைச் சொல்லி வசைபாடியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கரையில் இருந்த அந்த பெண்களின் ஆடைகளை எடுத்து அப்பகுதியில் இருந்த முள் காட்டில் வீசி உள்ளனர்.
வன்கொடுமை சட்டம்
இதனால் பயந்து போன அந்த பெண்கள் அங்கிருந்து கட்டி இருந்த ஈரத் துணியுடன் வீட்டிற்கு ஓடியுள்ளனர். இதை அடுத்து அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் தங்களுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து நாகுடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள நாகுடி போலீசார் பெண்களை வசை பாடி மிரட்டிய ஐயப்பன் முத்துராமன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதோடு தலைமறைவாக இருக்கும் அவர்களை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.