85 சாட்சிகளிடம் விசாரணை..சிக்காத அக்யூஸ்ட்! குடிக்கும் நீரில் மலம்.. குற்றவாளிகள் கைது எப்போது?
துக்கோட்டை : யூகத்தின் அடிப்படையில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாது என்றும் முழுமையாக விசாரணை நடத்தி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என புதுக்கோட்டையில் குடிநீரில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரத்தை விசாரிக்கும் சிபிடிஐடி போலீசார் கூறியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியல் இனத்து மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மற்றும் ஆய்வு செய்வதற்காக ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை செய்த போது அந்த பகுதியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு பட்டியல் இனத்து மக்களை அனுமதிக்கவில்லை என்ற புகார் எழுந்தது.
அந்த சாதி **.. குளத்தில் பெண்களை விரட்டிய கும்பல்! ஈர துணியோடு காட்டுக்குள்..புதுக்கோட்டையில் தான்!
குடிநீரில் மலம்
மேலும் அங்கு உள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை பயன்படுத்தப்படுவதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பட்டியல் இனத்து மக்களை மாவட்ட ஆட்சியர் கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு செய்தார். மேலும் அந்த டீக்கடை உரிமையாளர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதேபோன்று கோயிலில் சாமி ஆடி தரக்குறைவாக பேசிய மூதாட்டியையும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டார்
சமரச பேச்சுவார்த்தை
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து சமுதாய மக்களையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அனைத்து சமுதாய மக்களும் வேண்டுகோள் விடுத்தனர்.
கோவிலில் வழிபாடு
மேலும் அய்யனார் கோவிலுக்கு அனைத்து சமுதாய மக்களும் வழிபடுவதற்கும் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டது. இரட்டை குவளை முறை குறித்து உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்வு காணப்பட்டது. மேலும் இன்று அய்யனார் கோவிலுக்கு அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக இணைந்து வழிபாடு செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமர் தலைமையில் அனைத்து சமுதாய மக்களும் அய்யனார் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
சிறப்பு விசாரணை குழு
இந்த நிலையில் மலம் கலக்கப்பட்ட மேல்நிலைத் தொட்டியை இடித்துவிட்டு புதிய தொட்டி கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும் குடிக்கும் தண்ணீரில் மலத்தை கலந்த நபர்களை போலீசார் தற்போது வரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டங்களையும் முன்னெடுத்தனர். இந்த நிலையில் குடிக்கும் தண்ணீரில் மலத்தை கலந்த நபர்கள் குறித்து விசாரிப்பதற்காக சிபிசிஐடி போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர்.
விசாரணை தீவிரம்
இந்நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 3 சமூகத்தைச் சேர்ந்த 45 நபர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு உள்ளது என காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். சம்பவம் நடந்த கிராமத்தில் சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான 10 குழுக்களை சேர்ந்த 35 போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக பேசிய அவர்,"யூகத்தின் அடிப்படையில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாது என்றும் முழுமையாக விசாரணை நடத்தி, இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்" என்றார்.
85 சாட்சிகள்
இந்த வழக்கில் இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 36 மற்றும் பிற சமூகத்தைச் சேர்ந்த 49 பேரின் வாக்குமூலம் பதியப்பட்டுள்ளது. மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காக சென்னை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விசாரணை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகவும், நேர்மையாகவும், தீவிரமாகவும் நடைபெற்று வருகிறது என தமிழக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது