பேரறிவாளனை நிரபராதி என்று நாங்கள் எப்போ சொன்னோம்.. அமைச்சர் ரகுபதி பரபரப்பு பதிலடி
புதுக்கோட்டை: பேரறிவாளனை தியாகி என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை என்றும் காங்கிரஸ் திமுக இடையேயான கூட்டணியில் சிலர் பிளவை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலைக்காக போராடியவர் அற்புதம் அம்மாள். விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவரையும் நேரில் சந்தித்து நன்றி கூறி வருகிறார் பேரறிவாளன். தன்னை காண வந்த பேரறிவாளனை கட்டித்தழுவி வரவேற்றார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை தொண்டர்கள் முன் வைக்கின்றனர். பேரறிவாளன் விடுதலைக்காக பாடுபட்டது நாங்கள்தான் என்று திமுகவினரும் அதிமுகவினரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் கட்சி எதிர்த்து வருகிறது. பேரறிவாளன் விடுதலை சட்டப்படி நியாயம் என்றாலும் தர்மப்படி ஏற்றுக்கொள்ள முடியாது என காங்கிரஸ் கட்சியின் எம்.பி திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிபத்து.. கரும்புகை, வெடித்து சிதறிய சிலிண்டர்!
உயிரிழந்தவர்கள்
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியுடன் குண்டு வெடிப்பில் ராஜீவ்காந்தி பாதுகாவலர் பிரதீப் கே குப்தா, கமாண்டோ வீரர் ரவிச்சந்திரன், மகளிர் காங்கிரஸ் உறுப்பினர் லதா கண்ணன், லதா கண்ணனின் 10வயது மகள் கோகிலவாணி, காங்கிரஸ் பிரமுகர் லீக் முனுசாமி, மகளிர் காங்கிரஸ் தலைவர் சந்தானி பேகம், காவல்ஆயவாளர் எட்வர்டு ஜோசப், காவல்ஆய்வாளர் ராஜகுரு, காவலர் தர்மன், காவலர் முருகன், மகளிர் காவலர் சந்திரா, கல்லூரி மாணவி சரோஜாதேவி, பார்வையாளர் எத்திராஜூ உள்பட பலர் பலியானவர்கள்.
தண்டனை
கொலை சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு, சிலர் விடுதலையான நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன் உள்பட ஏழு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். தன்னை விடுதலை செய்யக்கோரி சட்டப்போராட்டம் நடத்திய பேரறிவாளன் சில தினங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார்.
பேரறிவாளன் நிரபராதி இல்லை
இந்த விஷயத்தில் பேரறிவாளன் குற்றவாளிதான் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் குற்றவாளிகள் என்பதை மறுக்க முடியாது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நிரபராதி என குறிப்பிடவில்லை. நிரபராதிகளை விடுதலை செய்தது போல், முதலமைச்சர் முக ஸ்டாலின் கொண்டாடி வருகிறார் என்று பாஜகவின் அண்ணாமலை சாடியுள்ளார்.
தியாகி போல சித்தரிப்பதா?
உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மிக நுணுக்கமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் விடுதலை செய்யப்பட்டவர் கொண்டாடப்பட வேண்டியவர் கிடையாது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். பேரறிவாளனை தியாகி போல் தமிழ்நாடு முழுவதும் எடுத்து சென்று ஒரு சாதனை செய்தது போல திமுக கொண்டாடி வருகிறது. இது, திமுக வரலாற்றில் ஒரு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
அமைச்சர் ரகுபதி
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மனிதாபிமான அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். நிறைய ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார். பத்தாண்டு ஆயுள்தண்டனை பெற்றவர்களும் விடுதலை செய்யப்படுகின்றனர். நிபந்தனைகள் அடிப்படையில் ஆயுள்தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
என்றார்.
தியாகி என்று சொல்லவில்லை
பேரறிவாளனை தியாகி என்று எங்கேயும் சொல்லவில்லை என்றும் நிரபராதி என்று கூறவில்லை என்றும் சொன்ன அமைச்சர் ரகுபதி... அவரது தாயார் நடத்திய போராட்டத்தின் பலனாக பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
சண்டை மூட்டி விட நினைக்கிறார்கள்
தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, பேரறிவாளன் விடுதலையை வைத்து காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்கும் சண்டை மூட்டிவிட நினைக்கிறார்கள். கூட்டணி பிரிந்து விடும் என்று சிலர் தப்புக்கணக்கு போடுகிறார்கள். அவர்களுக்கும் உள்நோக்கம் தெரியும் எங்களுக்கும் தெரியும் என்றார். நிச்சயமாக குளிர்காய நினைத்தால் அவர்கள்தான் ஏமாந்து போவார்கள் என்றும் கூறினார்.