ஐயா குழந்தையை காணோம் ... பதறியடித்து ஓடி வந்த தாய்... குழந்தையை கண்டுபிடித்து ஒப்படைத்த ஸ்டாலின்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கூட்டத்தில் குழந்தையை காணவில்லை என்று ஒரு பெண் அவரிடம் முறையிட்டார்.
Recommended Video
மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், பாதுகாவலர்கள் தேடியதால் காணாமல் போன குழந்தை மீட்கப்பட்டது.
காணாமல் போன குழந்தையை மீட்டது போல். நாம் இழந்து நிற்கும் சுயமரியாதையும் மீட்போம் என மு.க.ஸ்டாலின் கூறியது அரங்கில் தொண்டர்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்ச்சி மூலமாக பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மு.க.ஸ்டாலின் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் உனையூரில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அதற்கு பதிலளித்து கொண்டிருந்தார்.
பதறியபடி ஓடி வந்த பெண்
அதன்பின் புகார் பெட்டி மூடி சீல் வைக்கும் நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது கூட்டத்தில் ஒரு பெண் பதறியபடி வேகமாக ஸ்டாலினை நோக்கி ஓடி வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினர். ஆனாலும் அந்த பெண் நிற்காமல் ஸ்டாலினிடம் வேமாக ஓடி வந்தார். இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் அந்த பெண்ணிடம் குறையை கேட்டறிந்தார்.
குழந்தை தொலைந்து விட்டது
அப்போது அந்த பெண் அழுதபடியே, தான் கண்டனூர் பகுதியை சேர்ந்தவர் எனவும் தன்னுடைய 4 வயதான பாலா என்ற குழந்தை கூட்டத்தில் தொலைந்து பொய் விட்டதாகவும், கண்டுபிடித்து தரும்படியும் கூறினார். இதனையடுத்து ஸ்டாலின், பாலா என்ற குழந்தை தொலைந்து விட்டது. குழந்தை கிடைத்தால் உடனடியாக மேடைக்கு கொண்டு வாருங்கள் என்று மைக் மூலம் தெரிவித்தார். பாதுகாவலர்கலும் அங்கு அந்த குழந்தையை தேடினார்கள்.
சுயமரியாதையை மீட்போம்
அதன்பிறப்பு காணாமல் போன அந்த குழந்தை கிடைத்தது. பின்னர் குழந்தையை மேடைக்கு கொண்டு வந்தனர். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், காணாமல் போன குழந்தையை மீட்டது போல். நாம் இழந்து நிற்கும் சுயமரியாதையும் மீட்போம் என கூறியது அரங்கில் தொண்டர்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தியது.