சீறி வந்த காளைகள்..மல்லுக்கட்டும் காளையர்கள்! களைகட்டிய தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு! போலீசார் தடியடி
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகளை வாடி வாசலுக்கு அனுப்பும்போது முறைகேடாக காளைகளுடன் உள் நுழைய முயன்ற நபர்களால் திடீர் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிக அளவு ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.
அதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தான் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் நடைபெற இது வழக்கம். மாவட்டத்தில் மட்டும் அரசு இதழில் வெளியிட்டு அரசு ஒப்புதலோடு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 200க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் மஞ்சுவிரட்டுகள் வடமாடு மஞ்சுவிரட்டு ஆகியவை நடைபெறும்.
2 முறை ஒத்திவைக்கப்பட்டு தொடங்கியது தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி! சீறி பாயும் காளைகள்
தச்சங்குறிச்சி
அதேபோன்று இந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் ஜனவரி 2ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது ஆனால் அதற்கு அரசு அனுமதி அளிக்காமல் ஆறாம் தேதி நடப்பதற்கு அனுமதி அளித்தது. ஆனால் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்காததால் ஆறாம் தேதி நடைபெற வேண்டிய ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்தார். இதன் பின்னர் போராட்டங்கள் நடத்தப்பட்டதன் விளைவாக மாவட்ட நிர்வாகமானது விழா கமிட்டி மற்றும் அந்த ஊர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எட்டாம் தேதி அதாவது இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு உற்சாகம்
ஏற்கனவே ஆன்லைன் மூலமாக ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர் 450 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இன்று காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்ய நாதன் ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.
களையர்கள் தீவிரம்
முன்னதாக வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். முதலில் கோயில் காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குறிப்பாக புதுக்கோட்டை தஞ்சை திருச்சி திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. சீறி பாய்ந்து வரும் காளைகளை வீரர்கள் அடக்குவதற்கு மல்லு கட்டி வருகின்றனர்.
தடியடி
பல காளைகள் வீரர்களுக்கு போக்கு காட்டி விட்டு சீறி பாய்ந்து சென்றது. சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கியது இருப்பினும் வீரர்களின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கு பல்வேறு யுக்திகளையும் காளைகள் கடைபிடித்து வருகின்றன. ஜல்லிக்கட்டை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். சில வீரர்கள் மாடு முட்டியதில் காயமடைந்த நிலையில் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியின் போது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
என்ன காரணம்?
ஏற்கனவே விழா குழு மூலம் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டது. அதை வைத்தே அவர்கள் காளைகளை அவிழ்த்து வந்தனர். இந்நிலையில் டோக்கன் சோதனை செய்யும் இடத்திலும் அதற்கு இடையே வாடிவாசலுக்கு முறைகேடாகச் செல்ல சில காளை உரிமையாளர்கள் முயன்றுள்ளனர். மேலும் தடுப்புகளை உடைத்துக் கொண்டு தள்ளுவாடி முறையில் மாடுகளை அவிழ்க்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் திடீர் குழப்பம் உருவான நிலையில் விழா கமிட்டியர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து அங்கு சென்ற போலீசார் முறைகேடாக மாடுகளை அவிழ்க்க முயன்றவர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.