குடிக்கும் தண்ணீரில் மலம்! பதறிப்போன புதுக்கோட்டை! மீண்டும் எப்படி தண்ணீர் குடிப்பது? அதிரடி முடிவு!
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் மக்கள் பயன்படுத்திய குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பழைய தொட்டியை இடித்து விட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியல் இனத்து மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மற்றும் ஆய்வு செய்வதற்காக ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை செய்த போது அந்த பகுதியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு பட்டியல் இனத்து மக்களை அனுமதிக்கவில்லை என்ற புகார் எழுந்தது.
இனி வேலைக்கு ஆகாது! அதிமுக வழக்கில் சாதகமான தீர்ப்பு வருமா? எடப்பாடி எடுத்த முக்கிய முடிவு! அதேதான்!
குடிநீரில் மலம்
மேலும் அங்கு உள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை பயன்படுத்தப்படுவதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பட்டியல் இனத்து மக்களை மாவட்ட ஆட்சியர் கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு செய்தார். மேலும் அந்த டீக்கடை உரிமையாளர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கம் செய்ய பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார் இதேபோன்று கோயிலில் சாமி ஆடி தரக்குறைவாக பேசிய மூதாட்டிவையும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டார்
சமரச பேச்சுவார்த்தை
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து சமுதாய மக்களையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அனைத்து சமுதாய மக்களும் வேண்டுகோள் விடுத்தனர்.
கோவிலில் வழிபாடு
மேலும் அய்யனார் கோவிலுக்கு அனைத்து சமுதாய மக்களும் வழிபடுவதற்கும் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டது. இரட்டை குவளை முறை குறித்து உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்வு காணப்பட்டது. மேலும் இன்று அய்யனார் கோவிலுக்கு அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக இணைந்து வழிபாடு செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் அனைத்து சமுதாய மக்களும் அய்யனார் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தண்ணீர்
இதற்கிடையே மக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததால் அதனை மீண்டும் சுத்தப்படுத்தி மக்களுக்கு வழங்க வேண்டாம் எனக் கோரிக்கை எழுந்தது. இதை அடுத்து அந்த கிராமத்தில் அருகில் இருக்கும் இன்னொரு மேல்நிலைத் தொட்டியில் இருந்து குழாய்கள் பதித்து குறிப்பிட்ட பகுதிக்கு தண்ணீர் விநியோகிக்க ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வந்தது. இந்நிலையில் இன்று மாற்றுப் பகுதியில் இருந்து குடிநீர் வழங்கும் பணியை கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை தொடங்கி வைத்தார்.
புதிய தொட்டி
தொடர்ந்து அந்த கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு தோல் நோய் சிறப்பு முகாமும் நடத்தப்பட்டது. இதற்கிடையே வேறொரு பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தாலும் அது நிரந்தர தீர்வாக இருக்காது என்பதால் மலம் கலக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டியை இடித்துவிட்டு புதிய தொட்டி கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து விரைவில் அந்த தொட்டியை இடித்து விட்டு புதிய மேல்நிலை குடிநீர் தொட்டியை கட்டி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.