பட்டென தாக்கிய மின்னல்.. சுருண்டு விழுந்த பள்ளி மாணவன்.. மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது சோகம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் பகுதியில் 16 வயது மாணவன் ஒருவன் மின்னல் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பள்ளி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் மாணவன் கஜினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விளையாட்டு பாட வேளையில் சக மாணவர்களுடன் கஜினி கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். விளையாட்டில் பந்து வீசும் போது மின்னல் அவரை தாக்கியுள்ளது.

காலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் பருவமழையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இடி மின்னல் போன்றவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2020-2021 ஓராண்டில் மட்டும் இந்தியாவில் ஏற்படும் மின்னல்களின் அளவானது சராசரியை விட சுமார் 34 சதவிகிதம் அதிகரித்துள்ளது என அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE) தெரிவித்துள்ளது. இக்காலகட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 1,697 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 11ம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா நயினார் கோவில் யூனியன் தாளையடிகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேலு. இவருடைய மகன் கஜினி. நயினார் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை விளையாட்டு பாட வேளையில் சக மாணவர்களுடன் சேர்ந்து இவர் கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார். கஜினி பந்து வீசிக்கொண்டு இருந்தபோது திடீரென்று இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மாணவன் கஜினி உயிரிழந்தார். மற்ற மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் செய்வது அறியாது திகைத்துள்ளனர்.
இதனையடுத்து கஜினியின் உடலை மீட்ட ஆசிரியர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மாணவன் கஜினி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். பின்னர் கஜினியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவன் கஜினி வெள்ளியால் ஆன சங்கிலியை கழுத்தில் அணிந்திருந்தது கூட உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பள்ளி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications