சொன்னதை செய்வோம்.. பசும்பொன்னுக்கு தீடீர் விசிட் அடித்த ஜெய பிரதீப்! தேவர் அமர்ந்த அதே இடத்தில்..!
இராமநாதபுரம் : அதிமுகவில் தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள ஓ.பன்னீர்செல்வம் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் தேவருக்கு வெள்ளி கவசம் மற்றும் ருத்ராட்ச மாலை திருவாச்சி உள்ளிட்டவற்றை வழங்கினார். அதையொட்டி அவரது மகன் ஜெயப்பிரதீப் பசும்பொன்னுக்கு திடீர் விசிட் மேற்கொண்டு இருக்கிறார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்த போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு தென் மாவட்டங்களில் பெரிய அளவில் நிர்வாகிகள் யாரும் கை கொடுக்கவில்லை. ராமநாதபுரத்தைச் சேர்ந்த தர்மர் மட்டுமே அவருக்கு ஆதரவாக நின்றார்.
அதனைத் தொடர்ந்து மேலும் சில நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதும் பெரிய அளவில் ஆதரவு வட்டம் பெருகவில்லை. இதனால் அவர் தரப்பு நிர்வாகிகள் சற்று மன வருத்தத்தில் இருந்தனர்.

முக்குலத்தோர் சமூகம்
அதனைத் தொடர்ந்து அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதியான மாயத் தேவரின் மரணம் அதிமுகவில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. தென் மாவட்டங்களில் அதிமுக மிக வலுவாக எதிர்ப்பதற்கு முக்குலத்தோர் சமுதாயம் முக்கிய காரணமாக இருக்கிறது. எம்ஜிஆர் இருந்த போதும் ஜெயலலிதா இருந்த போதும் முக்குலத்து நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதோடு அமைச்சரவையில் பதவி வழங்கி அழகு பார்த்தனர்.

எடப்பாடிக்கு எதிர்ப்பு
எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையிலும் முக்குலத்தோர் செல்வாக்கு ஓங்கி இருந்த நிலையில் அதற்கு பின்னர் எதிர்க்கட்சியான பிறகு அந்த சமுதாய நிர்வாகிகளை புறந்தள்ளி வருவதாக அதிருப்தி குரல்கள் மெல்ல மெல்ல எனத் தொடங்கின. குறிப்பாக மாயத்தேவர் மரணத்தின் போது கட்சி பேதம் பார்க்காமல் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் அமைச்சர்கள் மாய தேவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளாதது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பெரிய பின்னடைவு
அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதிக்கு எடப்பாடி தரும் மரியாதை இவ்வளவுதானா என அவருக்கு எதிராக கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டது. தொடர்ந்து அந்த சமுதாயத்தை சமாதானம் செய்யும் வகையில் ஆர்பி உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். ஆனாலும் சில விவகாரங்களில் ஆர்பி உதயகுமார் உருப்படியாக எதையும் செய்யாததால் அவருக்கான முக்கியத்துவமும் குறைக்கப்பட்டது. துணைப் பொதுச் செயலாளர், பதவி பொருளாளர் பதவி என அடுத்தடுத்து பதவிகள் வழங்கப்பட்டாலும் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது பெரிய பின்னடைவாக கருதப்பட்டது.

தேவர் குருபூஜை
அதை தொடர்ந்து தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவையும் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார் ஓபிஎஸ். தேவர் குருபூஜை விழாவின்போது அதிமுக சார்பில் தங்க கவசம் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது அதை வங்கியில் இருந்து பெறுவது தொடர்பாக ஓபிஎஸ் இபிஎஸ் மோதலால் சிக்கல் இருந்தது. அதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகளே அதை வங்கியிடம் இருந்து பெற்று தேவர் சிலைக்கு அறிவித்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அதிரடி ஒன்றை மேற்கொண்டார் ஓ.பன்னீர்செல்வம் அதாவது ஜெயலலிதா தங்க கவசம் வழங்கியது போல தனது சொந்த நிதியில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பில் வெள்ளிக் கவசம் வெள்ளி ருத்ராட்ச மாலை மற்றும் திருவாச்சி ஆகியவற்றை வழங்கினார்.

ஜெய பிரதீப்
இதனால் ஓ பன்னீர்செல்வத்துக்கு தேவர் சமூக மக்கள் மத்தியில் செல்வாக்கு உயர்ந்தது. தொடர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. எடப்பாடி பழனிச்சாமியின் அந்த விழாவில் கலந்து கொள்ளாததால் ஆர்பி உதயகுமாரை விரட்டியடிக்கும் அளவுக்கு மோதல்கள் எழுந்தன. இப்படியான சூழ்நிலையில் தற்போது பசும்பொன்னுக்கு திடீர் விசிட் அடித்திருக்கிறார் அவரது மகனான ஜெய பிரதீப்.
தீவிர அரசியலில் இல்லாவிட்டாலும் தமிழக முழுவதும் ஜெய பிரதீப்புக்கென தனி ஆதரவு வட்டம் இருக்கிறது. இது மட்டுமல்லாமல் கடந்த காலங்களில் சென்னையில் பல முக்கிய நிகழ்வுகளை மேற்கொள்வது எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்கள் ஓட்டுவது தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு ஆட்களை திரட்டி அழைத்து வருவது என பெரும்பாலான பணிகளில் ஜெயபிரதீப்பின் பங்களிப்பு அதிகமாக இருந்தது.

திடீர் விஜயம்
வெள்ளிக்கவசம் தயாரிக்கும் பொறுப்பையும் ஜெயப்பிரதீப்பே ஏற்று இருந்தார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தேவருக்கு வழங்கிய வெள்ளி கவசம் 48 வது மண்டல பூஜை நாளான இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதையொட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு வெள்ளிக்கவசம் ருத்ராட்ச மாலை திருவாச்சி ஆகியவை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். மேலும் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் புடைசூழ பசும்பொன் கிராமத்திற்கு சென்று அவர் நினைவிடத்தில் பூஜையில் கலந்து கொண்ட புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். ஜெயப்பிரதீப் அதுமட்டுமல்லாமல் முத்துராமலிங்க தேவரின் இல்லத்தில் அவரது உறவினர்களை சந்தித்ததோடு எப்போதும் முத்துராமலிங்கத் தேவர் தியானம் செய்யும் அறையிலும் அமர்ந்து தியானம் மேற்கொண்டார்.












Click it and Unblock the Notifications