பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி மிரட்டிய ஆசிரியர் ஹபீப் சஸ்பெண்ட் - கல்வி அலுவலர் உத்தரவு
மாணவிகளிடம் ஆபாசமாக பேசி மிரட்டியதாக கைது செய்யப்பட்ட அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம்: முதுகுளத்தூரில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதால் கைதான பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் ஹபீப் முகமதுவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஹபீப் முகம்மது. இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை செய்கிறார். 9,10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தியுள்ளார்.
அப்போது மாணவிகளின் மொபைல் எண்களை பதிவு செய்து வைத்துக்கொண்டு தொடர்ந்து பேசி வந்துள்ளார். அதில் தனது பள்ளி மாணவி ஒருவரிடம் அவர் ஆபாசமாக பேசி தொல்லை தந்தது தெரியவந்தது.

போலீசில் புகார்
அறிவியல் ஆசிரியர் ஹபீப் ஆபாசமாக பேசும் ஆடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. உன் வீட்டிற்கு தெரியாமல் புத்தகங்களுடன் தனது வீட்டிற்கு வா இல்லை என்றால் நான் இந்த ஆண்டு தேர்ச்சி அடையவிட மாட்டேன் எனவும், சில மாணவிகளின் பெயர்களை குறிப்பிட்டு இதற்கு முன் அந்த மாணவிகள் தனது வீட்டிற்கு வந்ததாகவும் கூறியுள்ளார் ஹபீப்.

யாருக்கும் தெரிய வேண்டாம்
நாம் பேசியது வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் நமக்குள் மட்டுமே இருக்கட்டும் எனவும் ஹபீப் பேசியுள்ளார்
ஹபீப் பள்ளி மாணவிகளுடன் ஆபாசமாக பேசிய ஆடியோ பதிவு தற்போது வாட்சாப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் வைரலானது.

வழக்குப் பதிவு
மாணவியின் தரப்பிலும் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது. அதன் அடிப்படையில், மாவட்ட எஸ்பி கார்த்திக் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.இதையடுத்து, கூடுதல் எஸ்பி லயோலா இக்னேஷியஸ் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து காவல்துறையினர் ஹபீப் முகம்மது மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

கல்வி அலுவலர் உத்தரவு
ஆடியோவில் உள்ளது ஹபீப் குரல்தான் என்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கைதான பள்ளி ஆசிரியர் ஹபீப் முகமதுவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications