11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை.. மேட்டூர் அணையால் காவிரியில் 60,000 கனஅடி நீர் திறக்க வாய்ப்பு!
சேலம்: கர்நாடகத்தில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்ற வாய்ப்புள்ளது என்பதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் உள்ளன. இங்கு தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்தது. தற்போதும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளில் இருந்து வெளியேறும் நீர் காவிரி ஆற்றின் மூலம் சேலம் மேட்டூர் அணைக்கு வருகிறது.

நிரம்பிய மேட்டூர் அணை
இதனால் கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் மேட்டூர் அணை வேகமாக நிரம்பியது. இதனால் மேட்டூர் அணை தற்போது தனது முழு கொள்ளவான 120 அடியை எட்டி உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

60,000 கனஅடி நீர் திறக்க வாய்ப்பு
அந்த வகையில் இன்று காலையில் அணைக்கு வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இது மதியம் 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் முழுவதுமாக வினாடிக்கு 35,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. அதன்படி வினாடிக்கு 60,000 கனஅடி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
இதனால் பாதுகாப்பு கருதி காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
காவிரி ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் தண்ணீரின் அளவு அதிகரிக்கலாம் என்பதால் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க நீர்ஆதாரத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், குளிக்க, துணிதுவைக்க, செல்பி எடுக்க யாரும் காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications