சேலத்தில் போலீசாருடன் கடும் மோதல்.. பாஜக நிர்வாகிகளை தரதரவென இழுத்து சென்ற எஸ்.பி.. பரபர வீடியோ!
சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ளது ஜலகண்டாபுரம். இங்குள்ள மார்க்கெட்டில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் ஜலகண்டாபுரம் மார்க்கெட்டில் கடந்த மாதம் புதிய கொடி கம்பம் நடப்பட்டது.
Recommended Video
இந்த கொடி கம்பம் உரிய அனுமதி பெறாமல் நடப்பட்டதாக கூறப்படுகிறது. அனுமதி பெறாமல் கொடி கம்பம் நட்டப்பட்டதாக கூறி ஜலகண்டாபுரம் பேரூராட்சி சார்பில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பாஜகவின் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.

கொடி கம்பம் அகற்றம்
இந்த நிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து ஏராளமான பாஜகவினர் இன்று ஜலகண்டாபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சுதிர் முருகன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.

பாஜக-போலீசார் தள்ளுமுள்ளு
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அதே இடத்தில் பாஜகவினர் மீண்டும் கட்சியின் கொடி கம்பத்தை நாட்டினார்கள். இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பாஜகவினர் அமைத்த கொடி கம்பத்தை அகற்றினார்கள். இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தரதரவென இழுத்து சென்றார்
ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் மோதலாக மாறி, இரு தரப்புக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அந்த பகுதியே போர்க்களம்போல் காட்சியளித்த நிலையில் மாவட்ட போலீஸ் எஸ்.பி ஸ்ரீ அபினவ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை மாவட்ட போலீஸ் எஸ்.பி தரதரவென இழுத்து சென்று அதிரடியாக கைது செய்தார்.

எஸ்.பி.யின் செயலுக்கு எதிர்ப்பு
இதற்கு பாஜகவினரும், அப்பகுதியை சேர்ந்த அதிமுகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பாஜக மாவட்ட நிர்வாகிகளை எஸ்.பி தரதரவென இழுத்து சென்று கைது செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. எஸ்.பி.யின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications