பாம்பின் வாயில் அகப்பட்ட தவளையை போல் ஆகிவிட்டது அதிமுக நிலை -முத்தரசன் விமர்சனம்
சேலம்: பாம்பின் வாயில் அகப்பட்ட தவளையை போல் அதிமுகவின் நிலை ஆகிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
மேலும், மற்ற கட்சிகளை பலவீனப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இதனைக் கூறினார்.

தமிழக அரசு
தமிழகத்தில் நடப்பது அம்மா ஆட்சி இல்லை என்றும் தமிழக நலனை, உரிமைகளை அதிமுக அரசு எப்போதோ விட்டுக்கொடுத்து விட்டது எனவும் முத்தரசன் புகார் தெரிவித்துள்ளார். அம்மாவின் ஆட்சி எனக் கூறிக்கொண்டால் மட்டும் போதாது, ஜெயலலிதா எதிர்த்த உதய் மின் திட்டத்தை எதிர்த்திருக்க வேண்டும், நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து முறியடித்திருக்க வேண்டும், ஆனால் இதை எதையும் செய்யாத ஆட்சி எப்படி அம்மாவின் ஆட்சியாக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பகல் கனவு
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற அணி மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் என்றும், திமுக கூட்டணியை பலவீனப்படுத்தலாம் என பாஜக கனவு காணுமேயானால் அது பகல் கனவாகத் தான் முடியும் என முத்தரசன் சாடினார். பாஜகவோடு சேரும் எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழக மக்கள் உறுதியாக நிராகரிப்பார்கள் எனத் தெரிவித்தார்.

முன்னுக்கு பின் முரண்
இந்தியாவில் பல மாநிலங்களில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் அதை தொடர்வது ஏன் என வினவிய முத்தரசன், முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய முடிவெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை முன்னுக்கு பின் முரணாக மக்களை கடுமையாக பாதிக்கக்கூடிய வகையில் சுகாதாரத்துறை செயல்பாடுகள் உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

பதில் சொல்க
இதனிடையே பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமியின் நேற்றைய பேட்டி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், வி.பி.துரைசாமி என்றால் யார் அவர் என முத்தரசன் கேள்வி எழுப்பினர். பின்னர் பேசிய அவர், திமுகவில் இருந்து சென்றுள்ளாரே அவரா என நினைவில் கொண்ட முத்தரசன் இது குறித்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தான் பதில் சொல்ல வேண்டும் எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications