மோடி, அமித் ஷா, ஆளுநர் ரவி.. மூவருக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி உண்மையாக உள்ளார்.. உதயநிதி பேச்சு!
ஜெயலலிதா உட்பட யாருக்கும் எடப்பாடி பழனிசாமி உண்மையாக இருக்கவில்லை என்று உதயநிதி விமர்சனம்
சேலம்: பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகிய மூவருக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி உண்மையாக இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, கட்சித் தொண்டர்கள், தமிழ்நாடு மக்கள் என யாருக்கும் எடப்பாடி பழனிசாமி உண்மையாக இருக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி குரும்பப்பட்டியில் திமுக சார்பில் 1,000 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், சேலத்தில் எப்பொழுது வந்தாலும் வரவேற்பு பெரிதாகவும் எழுச்சியாகவும் இருக்கும். கடந்த சட்டமன்ற தேர்தலில் எங்களை ஏமாற்றிவிட்டீர்கள். பிரச்சாரத்திற்கு ஒரு பகுதியாக சென்றோம். மீண்டும் இந்த தவறை செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

திமுக கோட்டை
நீங்கள் கொடுக்கும் வரவேற்பும் எழுச்சியும் அதிக நம்பிக்கையை அளிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்திற்கு என்று பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார். அமைச்சர் நேரு, சேலம் மாவட்டத்தையும் திமுகவின் கோட்டையாக மாற்றி காட்டுவார் என்று நம்புகிறேன். திமுகவினர் கட்சிப் பணியில் ஈடுபட்டு, சேலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றி காட்ட வேண்டும்.

மூத்த முன்னோடிகள்
அதேபோல் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவை 20 மாவட்டங்களில் நடத்தி முடித்துவிட்டோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவை நடத்திக் காட்டுவோம். பெரியார், அண்ணா இவர்களை நேரில் பார்த்தது கிடையாது. மூத்த முன்னோடிகள் அவருடன் பயணித்து இருப்பார்கள். உங்கள் முகத்தில் அவர்களைப் பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி
தொடர்ந்து, சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு வந்துவிட்டு, எடப்பாடி பழனிசாமி பற்றி பேசாமல் போனால் அவர் கோபித்துக் கொள்வார். எடப்பாடி பழனிசாமி யாருக்கும் உண்மையான இருந்ததில்லை. குறிப்பாக ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கும் எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை. அதேபோல் கட்சித் தொண்டர்கள், தமிழக மக்களுக்கும் உண்மையாக இல்லை.

3 பேர் யார்?
எடப்பாடி பழனிச்சாமி உண்மையாக இருப்பது மூன்று பேருக்கு மட்டும் தான். அந்த மூன்று பேர் யாரென்றால், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் தான். சட்டசபையில் தமிழ்நாடு ஆளுநர் அவருக்கு பிடித்த வார்த்தைகளை மட்டும் வாசித்துவிட்டு, மற்ற வார்த்தைகளை விட்டுவிட்டார். இதனால் தமிழ்நாடு முதலமைச்சர் சட்டசபையில், ஆளுநர் இருக்கும்போதே அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். இதனால் ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளியேறினார்.

ஈரோடு இடைத்தேர்தல்
ஆனால் ஆளுநருக்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறிவிட்டனர். ஆளுநரை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் என்று பயந்துவிட்டார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை மக்கள் தேடி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications