அன்புமணிக்கு ‘ஹெவி ஷாக்’ கொடுத்த எடப்பாடி டீம்.. ஸ்பாட்டில் இருந்தபோதே சம்பவம்! உச்சகட்ட டென்ஷன்!
சேலம் : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் இருந்தபோதே, சேலம் பாமக நிர்வாகிகளை அதிமுகவினர் தங்கள் பக்கம் இழுத்ததால், அதிர்ச்சி அடைந்த அன்புமணி ராமதாஸ், மாவட்ட நிர்வாகிகளை கடிந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாமக நிர்வாகிகள் உட்பட சுமார் 50 பாமகவினர் சேலத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
பாமக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்காக, அன்புமணி ராமதாஸ் சேலம் வந்திருந்தபோதே நடந்த இந்தச் சம்பவத்தால் பாமக தரப்பு அப்செட் ஆகியுள்ளது.
அதிமுகவுடன் பாமக கூட்டணியில் இருக்கும் நிலையில், பாமக நிர்வாகிகளை அதிமுகவினர் தங்கள் கட்சிக்கு இழுத்தது சேலம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரிக்கு வண்டியை விட்ட எடப்பாடி பழனிசாமி! பஞ்சமியில் வராஹி வழிபாடு! தோல்வி கூட தோற்று விடுமாம்!
சேலத்தில் ராமதாஸ்
பாமகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கார்த்தி, வன்னியர் சங்கத்தின் மாநில செயலாளராக இருக்கிறார். கார்த்தி இல்லத் திருமணம் சமீபத்தில் சேலத்தில் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அடுத்த நாள் காலையில் திருமணத்தன்று பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தங்களுடைய குடும்பத்துடன் சென்று திருமணத்தை நடத்தி வைத்தனர்.
எடப்பாடி பழனிசாமி வீட்டில்
இந்த திருமண விழாவில் பாமகவைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதே நாளில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் பாமகவை சேர்ந்த சுமார் 50 பேர் எடப்பாடி பழனிசாமியின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். பாமகவில் இருந்து அதிமுகவில் இணைந்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் எடப்பாடி பழனிசாமி.
பாமக நிர்வாகிகள்
பாமகவை சேர்ந்த ஒன்றிய மாணவர் அணி துணை செயலாளர் முருகேசன் தலைமையில் 30 பாமகவினரும், பாமக மீனவர் அணி செயலாளர் ஜவகர் தலைமையில் பாமகவைச் சேர்ந்த 20 பேர் என மொத்தமாக 50 பேர் அதிமுகவில் இணைந்துள்ளனர். சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் வழிகாட்டுதலில், அதிமுகவை சேர்ந்த ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு ஏற்பாட்டில் பாமகவினர் கட்சி மாறியதாக கூறப்படுகிறது.
அதே நாளில் சம்பவம்
வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரான ஏ.வி.ராஜு, சீக்ரெட்டாக திட்டமிட்டு, எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருக்கும்போது, அவர் முன்னிலையிலேயே பாமகவினரை அதிமுகவில் இணைத்திருக்கிறார். பாமக தலைவர் அன்புமணி சேலத்தில் இருந்த அதே நாளில் பாமகவைச் சேர்ந்த 50 பேர் அதிமுகவில் இணைந்தது சேலம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக - பாமக கூட்டணியில் இருக்கும் நிலையில் நடந்த இந்த கட்சி தாவல் கூட்டணிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணி அப்செட்
பாமகவினர் கட்சி தாவிய தகவல் அறிந்து, பாமக தலைவர் அன்புமணி, சேலம் மாவட்ட நிர்வாகிகளை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதிமுகவிலேயே ஆயிரம் குழப்பம் நடக்கிறது. அங்கு சேரும் அளவுக்கு கட்சி நிர்வாகிகளை அதிருப்தியில் வைத்திருக்கிறீர்களா என காட்டமாக நிர்வாகிகளிடம் கேட்டுள்ளார் அன்புமணி. அதுவும் ராமதாஸும் சேலத்தில் இருந்தபோதே இப்படி ஒரு சோதனை நடந்திருக்கிறது என்பதால் அன்புமணி நிர்வாகிகளிடம் டென்ஷனாகப் பேசினாராம்.