சென்னையில் சமூக தொற்று ஏற்பட்டுள்ளதா.. மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும்.. விஜயபாஸ்கர் பேட்டி
சேலம்: சென்னையில் கொரோனா வைரஸ் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். நோயாளிகள் எண்ணிக்கை குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், தமிழக அரசு. கொரோனா நோயாளிகளை கவனத்துடன் கையாள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 1927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 36841 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரேனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் சுமார் 120 பேர் கொரானாவால் உயிரிழந்துள்ளனர். தினமும் உயிரிழப்பும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1008 பேர் கொரோனாவில் இருந்து குணம்.. மாவட்ட வாரியாக விவரம்
விஜயபாஸ்கர் பேட்டி
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா சிகிச்சை சரியான திசையில் செல்கிறது. இந்தியாவிலேயே அதிக அளவு கொரோனா பரிசோதனை தமிழகத்தில் தான் நடத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் சிறப்பான பணி
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட சுகாதார பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். எனவே ‘கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை.
ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பு
அரசு கொரொனா தொற்று நோயாளிகளை கவனமுடன் கையாண்டு வருகிறது. மருத்துவக் குழு பரிந்துரையின் பேரிலேயே அதிக அளவில் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. பரிசோதனை காரணமாகவே அதிக நோய்த்தொற்று ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுகிறது. தமிழகத்தில் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை வலுப்படுத்தி வருகிறோம்.
மத்திய அரசு அறிவிக்க வேண்டும்
சேலத்தில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் மருத்துவர்கள் மருத்துவக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எளிதில் நோய்த் தொற்று ஏற்படக்கூடிய 11 வகை நபர்களை கண்டறிந்து மிகுந்த கவனத்துடன் பாதுகாத்து வருகிறோம். சென்னையில் சமூக தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும்' இவ்வாறு கூறினார்.