லோக்சபா தேர்தலில் அன்புமணியை எதிர்த்து காடுவெட்டி குரு தாயார் போட்டி… குடும்பத்தினர் அறிவிப்பு
Recommended Video

சேலம்:லோக்சபா தேர்தலில் அன்புமணியை எதிர்த்து காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணி போட்டியிடுவார் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
வன்னியர் சங்க மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான காடுவெட்டி ஜெ.குரு உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும், அன்புமணியும் காரணம் என்று ஜெ.குருவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந் நிலையில், லோக்சபா தேர்தலில் அன்புமணியை எதிர்த்து காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணி போட்டியிடுவார் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். சேலத்தில் காடுவெட்டி ஜெ.குருவின் தங்கை மீனாட்சி, அத்தை மகன் மணி, மருமகன் மனோஜ், வேங்கை அய்யனார் ஆகியோர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

குடும்பத்தினர் அறிவிப்பு
அப்போது அவர்கள் கூறியதாவது:வன்னியர் சமுதாய வளர்ச்சிக்காக ஜெ.குரு 40 ஆண்டுகளாக உழைத்தவர். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் 4 முறை கைதானவர். வன்னியர் சமுதாய நலனுக்காக, பாமக பாடுபடும் என்று நம்பியவர் ஜெ.குரு.

அமெரிக்காவில் சிகிச்சை
5 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்ட போது அமெரிக்கா அழைத்து சென்று சிகிச்சையளிப்போம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும், அன்புமணியும் கூறினர். ஆனால், உரிய சிகிச்சை அளிக்காமல் அவரை கொலை செய்துவிட்டனர்.

அழித்திட முயற்சி
குருவின் குடும்பத்தினரை அழிக்க முயற்சிகள் நடக்கிறது. குரு சமாதியில் அவரது பிறந்த நாளன்று விளக்கேற்றி நினைவஞ்சலி செலுத்த எங்களை விட வில்லை. இந்த கூட்டத்தில் ஜெ.குருவின் மகன் கனல் அரசன் கலந்து கொள்ள இருந்தார்.

உயிருக்கு ஆபத்து என புகார்
அவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதிமுக, திமுகவுடன் பாமக மாறிமாறி கூட்டணி வைத்து, வன்னியர்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டது.

வன்னியர்களுக்கு வேதனை
திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி சேர மாட்டோம் என்ற ராமதாஸ், இப்போது அதிமுகவுடன் கூட்டணி சேருகிறார். தமிழக அரசு ராமசாமி படையாச்சிக்கு சிலை வைத்து அரசு விழாவாக கொண்டாடிய நிலையில், அவரது சிலைக்கு ராமதாசும், அன்புமணியும் மாலைகூட அணிவிக்காதது, வன்னியர்களிடையே வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

புதிய அமைப்பு உதயம்
வன்னியர்களின் நலனுக்காக, மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கம் என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறோம். அந்த அமைப்பு வன்னியர்களின் நலனுக்காக செயல்படும்.

அன்புமணியை எதிர்த்து போட்டி
லோக்சபா தேர்தலில் அன்புமணி எந்த தொகுதியில் நின்றாலும், அவரை எதிர்த்து ஜெ.குருவின் தாயார் கல்யாணி போட்டியிடுவார். அன்புமணியை தோற்கடிப்பதே எங்கள் நோக்கம். பாமகவின் மற்ற வேட்பாளர்களுக்கு எதிராக நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications