என்னது எனக்கே சேர் இல்லையா? நான் கோபமா போறேன்! கொந்தளித்த பாமக சதாசிவம்! சமாளித்த ஆபீசர்ஸ்!
சேலம் : சேலத்தில் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தனக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யாததால் தன்னை அவமதித்து விட்டதாகக் கூறி மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் வெளிநடப்பு செய்த நிலையில், அரைமணி நேரம் அதிகாரிகள் சமாதானம் பேசி மீண்டும் கூட்டத்திற்கு அழைத்து வந்தனர்.
'
சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக பாமகவைச் சேர்ந்த சதாசிவம் உள்ளார். அப்போது அதிமுக கூட்டணியில் பாமக சார்பாக போட்டியிட்ட அவர் திமுக வேட்பாளரை சுமார் 900 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அதிரடி பேச்சு, அதிரடி அரசியல் என பாமகவின் ஆக்டிவ் பாலிடிக்ஸ் செய்யும் நபர்களால் ஒருவரான இவர் சில சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக இவர்மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாமக சதாசிவம்
இந்நிலையில் சேலத்தில் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தனக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யாததால் தன்னை அவமதித்து விட்டதாகக் கூறி மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் வெளிநடப்பு செய்த நிலையில், அரைமணி நேரம் அதிகாரிகள் சமாதானம் பேசி மீண்டும் கூட்டத்திற்கு அழைத்து வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆய்வுக் கூட்டம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேலம் மண்டல அளவிலான ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் தொடங்கியது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் வந்திருந்தார். ஆனால் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகள் அமைச்சர் கயல்விழி அமர்ந்திருந்த வரிசையில் இவருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
வெளிநடப்பு
இதனை அடுத்து தனக்கு இருக்கை ஒதுக்கப்படாதது குறித்து அதிகாரிகளிடம் கேட்டார் சதாசிவம். இதனால் அதிகாரிகள் திருதிருவென விழித்த நிலையில், அவர்களிடம் முறையான பதிலும் இல்லை. இதனால் கோபமடைந்த சதாசிவம் ஆய்வுக் கூட்டத்தை புறக்கணித்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
மீண்டும் சமாதானம்
இதனை அடுத்து அதிர்ந்து போனஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் மாவட்ட வருவாய் அலுவலர் அவரை அரை மணி நேரம் அவரின் கையைப் பிடித்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்டு ஆய்வுக்கூட்டத்திற்கு அழைத்து சென்றனர். இருக்கைக்காக அமைச்சர் ஆய்வுக் கூட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் புறக்கணித்த விவகாரம் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.