பழரசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து.. கண்டக்டரை துடிதுடிக்க கொலை செய்த காதலி.. சேலத்தில் பகீர்
சேலம்: பழரசத்தில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து பஸ் கண்டக்டரை ஆண் நண்பர்களுடன் சேர்ந்து காதலி கொலை செய்த சம்பவம் சேலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டியைச் சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் சுப்பிரமணி (49). தனது மனைவி புஷ்பாவை பிரிந்து 20 வருடங்களாக தளவாய்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.
கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்!
இந்நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சித்ரா என்பவரது மகள் சர்வேஸ்வரி (35). இவர் கணவரை பிரிந்து தாயாருடன் .சேலம் தளவாய்பட்டியில் வசித்து வருகிறார். சித்ரா இஎஸ்ஐ மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார்.
தனியாக குடும்பம்
கணவரை பிரிந்து வாழ்ந்த வந்த சவேஸ்வரியுடன் கண்டக்டர் சுப்பிரமணிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் கள்ளக்காதலாக மாறி இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இதனிடையே, சர்வேஸ்வரியின் சகோதரி உமாமகேஸ்வரி(37)யும் கணவரை பிரிந்து 17 வயது மகளுடன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.
அவருடனும் சுப்பிரமணிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதுதெரிந்து சர்வேஸ்வரி தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். அதன்பின்னர் உமாமகேஸ்வரியும், சுப்பிரமணியும் தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
விசாரணை
வெள்ளிக்கிழமை இரவு சுப்பிரமணி வீட்டில் உள்ள கட்டிலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து உறவினர்களின் புகாரின்பேரில் சேலம் இரும்பாலை போலீசார் நேரில் வந்து பார்த்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட நிலையில் சுப்பிரமணி இறந்துகிடந்தது தெரியவந்தது.உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர்.
சிக்கிய உமா
விசாரணையில் அதில், சுப்பிரமணி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை பார்த்து ஆய்வு செய்ததில், வீட்டுக்கு 2 ஆண்கள் உமா மகேஸ்வரியுடன் சென்று வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உமாமகேஸ்வரியை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.
பழரசத்தில் மருந்து
உமா மகேஸ்வரிக்கு வேறு சில ஆண்களிடமும் பழக்கம் இருந்ததை அறிந்து சுப்பிரமணி கண்டித்திருக்கிறார். அடித்தும் துன்புறுத்தினாராம். இதனால் ஆத்திரமடைந்த உமா, சுப்பிரமணி உயிரோடு இருந்தால், இஷ்டப்படி சந்தோஷமாக இருக்க முடியாது என நினைத்து அவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக தனது 2 ஆண் நண்பர்களான செங்காட்டூரை சேர்ந்த நாகராஜன், கண்ணன் ஆகியோரை வரவழைத்தார். சுப்பிரமணிக்கு தூங்கும் போது இரவில் சாத்துக்குடி பழ ரசம் கொடுத்துள்ளார். அதில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்ததும், சுப்பிரமணி கட்டிலில் மயங்கி கிடந்தார். பின்னர் 2 நண்பர்களையும் வீட்டிற்கு வரவழைத்து, சுப்பிரமணியின் கை, கால்களை இறுக்கி பிடித்து தலையணையால் முகத்தை அமுக்கியும், கழுத்தை நெரித்தும், மர்ம உறுப்பை நசுக்கியும் கொலை செய்துள்ளனர்.
போலீசார் தகவல்
தனது ஆண் நண்பர்கள் அங்கிருந்து சென்றபிறகு, உமாமகேஸ்வரி சுப்பிரமணி பேச்சு மூச்சு இன்றி கிடப்பதாக, பெற்றோர், உறவினர்கள் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளார். இவ்வாறு போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து உமாமகேஸ்வரி, அவரது நண்பர்கள் நாகராஜன், கண்ணனை கைது செய்தனர்.