மின்வாரிய ஊழியர்கள் முன்களப் பணியாளர்களாக சேர்க்கப்படுவார்களா? .. மின்துறை அமைச்சர் சூப்பர் பதில்!
சேலம்: மின்வாரிய ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சேலத்தில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:- கொரோனா காலத்தில் மின்வாரிய ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.

முதல்வர் கவனத்துக்கு
அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மின்வெட்டு ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பணியாற்றி வரும் மின் ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது
சேலம் மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 600 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி தேவை அதிகமாக உள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எந்த இடத்திலும் உயிரிழப்பு ஏற்பட்டு விடாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.அனைவருக்கும் தரமான சிகிச்சையளிக்கப்படும்.

கடும் நடவடிக்கை
தேவையான கூடுதல் ஆக்சிஜன் வசதியை உருவாக்குவதற்காக சேலம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மாடுலர் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு இடத்திலும் 40 படுக்கைகளுக்கு குறைந்த அளவிலான ஆக்சிஜன் வசதி உருவாக்க முடியும். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு செலுத்தும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாடகைக்கு
சேலம் அரசு மருத்துவனைக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிந்த அவற்றை பூர்த்தி செய்ய நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.தொற்று குறைவான காலத்தில் சென்னைக்கு பணிக்கு அனுப்பப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீண்டும் சேலத்திற்கு வரவழைக்கப்படுவார்கள்.தனியார் தொழிற்சாலைகளில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் மருத்துவத் தேவைக்காக வாடகைக்கு பயன்படுத்தப்படும்.

தரமான உணவு
கொரோனா சிகிச்சை மையத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். அங்கு நோயாளிகளுக்கு முட்டையுடன் மூன்று வேளையும் தரமான உணவுவழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் மாவட்டத்திற்கு ரெம்டெசிவர் மருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications