வாழப்பாடியில் கணவரை கட்டையால் தாக்கி கொன்ற மனைவி.. குடிபோதையில் பைக் பறிமுதல் செய்த பல்லடம் போலீஸ்
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அத்தனூர் பட்டி கிராமத்தில் கணவரை கட்டையால் தாக்கி கொலை செய்த அரசு பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சித்தன் மகன் மணிகண்டன் (35). இவரது மனைவி இளமதி அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
இவர்களுக்கு சசீந்திரன் (11) என்ற மகனும், அஸ்விதா (6) என்ற மகளும் உள்ளனர். மணிகண்டனுக்கு குடிபழக்கம் இருந்து வந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்ததாக கூறப்படுகிறது.
மணிகண்டன் மீது தாக்குதல்
இந்நிலையில் நேற்று மாலை இளமதிக்கும் மணிகண்டனுக்கும் தகராறு ஏற்பட்டதையடுத்து இளமதி வீட்டில் கிடந்த கட்டையால் கணவரை தாக்கியுள்ளார். இதில் கணவர் மணிகண்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வாழப்பாடி போலீஸார்
தகவலறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆசிரியர் இளமதி மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
மனைவியே கொலை
மனைவியே கணவனை கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிகண்டனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர். மணிகண்டனை கொலை செய்ய உதவி செய்த நபர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் வாழப்பாடியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மணிகண்டனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லடத்தில் நடந்த குற்றம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிபவர் ராஜேஷ். இவர் கடந்த 30ம் தேதி பல்லடம் அருகே உள்ள சிங்கனூர் அரசு மதுபான கடை முன்பு சீருடை இல்லாமல் நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கட்டடத் தொழிலாளி பூவரசன் தனது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
ராஜேஷ் வண்டியின் ஆர்சி புத்தகம்
அவரைத் தடுத்து நிறுத்திய போலீஸ் ராஜேஷ் வண்டியின் ஆர்.சி.புக் லைசென்ஸ், எடு என மிரட்டியுள்ளார். ஆர்.சி. புக் வீட்டில் உள்ளது எனக் கூறவே வண்டியை நிறுத்திவிட்டு போய் எடுத்து வா என கூறி உள்ளார். இதையடுத்து இரு சக்கர வாகனத்தை அவரிடம் கொடுத்துவிட்டு நடந்து சென்று வண்டியின் ஆர்.சி. புக்கை எடுத்து கொண்டு சிங்கனூர் வந்துள்ளார்.
இரு சக்கர வாகனத்துடன் போலீஸார் மாயம்
அங்கு வந்து பார்த்த பொழுது இருசக்கர வாகனத்துடன் போலீஸ்காரர் மாயமானது தெரிய வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பூவரசன் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பல்லடம் போலீசார் விசாரணை செய்த பொழுது விடுமுறையில் இருந்த ராஜேஷ் சிங்கனூர் மதுபான கடைக்கு மது அருந்த வந்ததும், மதுபோதையில் இருந்த அவர் இருசக்கர வாகனத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது.
பல்லடம் போலீஸ்காரர் கைது
அதனை அடுத்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் அவிநாசிபாளையம் போலீஸ் ராஜேஷை பல்லடம் காவல் துறையினர் கைது செய்தனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை போலீஸார் கைது செய்யும் நிலையில் போலீஸார் ஒருவரே குடித்துவிட்டு பொதுமக்களின் வாகனத்தை பறிமுதல் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.