யாரு “டெம்பரவரி” நீயா? நானா? எடப்பாடிக்கு வந்துச்சே கோபம்! முதலமைச்சர் மீது “ஒருமையில்” விமர்சனம்
சேலம்: அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட தன்னை பார்த்து டெம்பரவரி பொதுச்செயலாளர் என்று சொல்லும் மு.க.ஸ்டாலின்தான் டெம்பரவரி தலைவராக இருந்தார் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "திமுக ஆட்சிக்கு 44 அமாவாசை தான். அதுகூட இருக்குமா என்று தெரியவில்லை. 2024 மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்தல் வந்தாலும் வந்துவிடும். இங்கு ஆட்சியா நடக்கிறது. இது ஆட்சியே இல்லை.
அதிமுக பொதுச்செயலாளர் “யார்” தெரியுமா? கறுப்பு “ஆடு” - எடப்பாடி பேச்சை கேட்டு தொண்டர்கள் “விசில்”
4 முதலமைச்சர்கள்
திமுக அரசுக்கு 4 முதலமைச்சர்கள் என நான் சொன்னேன். நிறைய முதலமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று அவரே ஒப்புக்கொண்டுவிட்டார். 4 முதலமைச்சருக்கே நாட்டு மக்களால் தாக்குபிடிக்க முடியவில்லை. இன்னும் சில முதலமைச்சர்கள் என்றால் நாமெல்லாம் வெளிநாட்டுக்குதான் செல்ல வேண்டும். இங்கு பிழைக்க முடியாது.
டெம்பரவரி யார்?
எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு டெம்பரவரி தலைவர் என்கிறார். எந்த கட்சிக்காவது டெம்பவரி தலைவர்கள் இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை அதிமுக பொதுக்குழு கூடி அதில், பொரும்பாலானவர்கள் தேர்ந்தெடுத்து இடைக்கால பொதுச்செயலாளர் ஆகி இருக்கிறேன். நீங்கள் அப்படியா இருந்தீர்கள். உங்கள் அப்பா உயிரோடு இருங்கும்போது நீங்கள் டெம்பரவரி தலைவராகவே இருந்தீர்கள்.
தகுதியில்லை
நீங்கள் செயல்தலைவராகதான் இருந்தீர்கள். கருணாநிதி உடல்நலக்குறைவால் வாய்பேச முடியாமல் இருந்த நிலையில்கூட உங்களை நம்பி கட்சியை ஒப்படைக்கவில்லை. உங்களை செயல்தலைவராகவே வைத்திருந்தார். எங்களை பேச உங்களுக்கு தகுதியில்லை. அதிமுகவை பொறுத்தவரை தொண்டனே பொதுச்செயலாளர்.
பொதுச்செயலாளர்
அதிமுகவில் தனிப்பட்ட யாரும் பொதுச்செயலாளர் கிடையாது. ஒட்டுமொத்த தொண்டனின் எதிர்பார்ப்பை பிரதிபலிப்பவர்தான் பொதுச்செயலாளர். அதுதான் பொதுச்செயலாளரின் கடமை. அதற்குதான் அதிமுக செயல்வடிவம் கொடுத்து இருக்கிறது. நீங்கள் எங்களின் பொதுக்குழு உறுப்பினர்கள் அமர்ந்திருந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.
கறுப்பு ஆடுகள்
அழகாய் அற்புதமாய் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி அறிவித்தார்கள். அதை பொறுக்க முடியவில்லை. எப்படியாவது இந்த கட்சி பிளவுபடாதா என்று முயற்சி செய்கிறார்கள். அதற்கு சிலர் துணை போகிறார்கள். யார் யார் என்று உங்களுக்கெல்லாம் தெரியும். இந்த கட்சிக்குள் இருக்கும் கறுப்பு ஆடு யார் என்று தெரியும். அதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளோம்." என்றார்.