மா.சு சொன்னது "பச்சைப் பொய்.." நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா சொல்லுங்க.. எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
சேலம்: நீட் தேர்வு தமிழ்நாட்டில் நடக்குமா, நடக்காதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம், ஓமலூரில் இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி மேலும் கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என்று சொன்னார்கள். அதுவும் நடக்கவில்லை. இன்னொரு பக்கம் கட்டுமான பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்து உள்ளது.
கட்டுமான தொழிலாளர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிமெண்ட் விலை, கம்பி விலை, ஜல்லி விலை உட்பட கட்டுமானம் தொடர்பான அனைத்து பொருட்களின் விலையும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

கட்டுமான பொருட்கள் விலை
இந்த அரசு உடனடியாக கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சிமெண்ட் விலையை கட்டுப்படுத்துவதற்காக அம்மா சிமெண்ட் என்ற பெயரில் வினியோகம் செய்யப்படும் என அறிவித்து குறைந்த விலையில் சிமெண்ட் சப்ளை செய்தார். ஏழை எளிய நடுத்தர மக்கள் வீடு கட்டுவதற்கு ஊக்கம் கொடுத்தவர் ஜெயலலிதா. அந்த திட்டத்தை இந்த அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் தான் ஏழை எளிய நடுத்தர மக்கள் பயனடைவார்கள்.

தடுப்பூசிக்கு கூட்டம்
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருப்பதை ஊடக செய்திகள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. ஒரு மையத்தில் தடுப்பூசி போடுவதாக அறிவிக்கிறார்கள், இதை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் செல்கிறார்கள். ஆனால் வெறும் 300 பேருக்கு தடுப்பூசி போட்டு விட்டு மற்றவர்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கிறார்கள். இதனால் மக்கள் கடும் அவதி படுகிறார்கள். எவ்வளவு பேருக்கு தடுப்பூசி இருக்கிறது, எத்தனை பேர் வரவேண்டும் என்பதை முதலிலேயே அறிவித்து தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

நீட் தேர்வு நடைபெறுமா, இல்லையா
நீட் தேர்வு விவகாரம் மிகவும் முக்கியமானது. இந்த வருடம் நீட் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா என்று சட்டசபையில் முதல்வரிடம் நேருக்கு நேர் நான் கேள்வி எழுப்பினேன். ஆனால் முதல்வர் முழுமையான பதில் சொல்லவில்லை. தேர்தல் நேரத்தில் திமுக சார்பில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார்கள். ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று திமுக அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜன் குழுவை நியமித்துள்ளது. அந்த குழு மக்களிடையே நீட்தேர்வு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கருத்துக் கேட்டு வருகிறது.

உயர் நீதிமன்றம் கேள்வி
நீட் தேர்வு, தொடர்பாக நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்துள்ளது. அப்போது நீட் தேர்வு, நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்து உள்ளதை, உயர்நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. தமிழகத்தில் அந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் நாம் தேர்வை நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இது எல்லாம் தெரிந்தும், தேர்தல் நேரத்தில் ஓட்டு பெற வேண்டும் என்ற அடிப்படையில் திமுக, மாணவர்களை குழப்பும் வகையில் ஒரு வாக்குறுதியை கொடுத்து வெற்றி பெற்றார்கள். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் நேற்று சுட்டிக்காட்டியுள்ளது.

மாணவர்கள் குழப்பம்
எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இது போன்ற வாக்குறுதிகளை அவர்கள் கொடுத்தார்கள். இப்போது அதை நிறைவேற்ற முடியவில்லை. நம்முடைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்ப நிலையில் இருக்கிறார்கள். இதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். இந்த வருடம் நீட் தேர்வு நடத்தப்படுமா, நடத்தக் கூடாதா என்பதை தமிழக அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியும்.

பச்சைப் பொய்
எனது ஆட்சி காலத்தின்போது, அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நீட் தேர்வில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம். மாற்று வழி மூலமாக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று யோசித்து நாங்கள் செயல்பட்டு வந்தோம். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் கூறியதால்தான் அந்த திட்டத்தை நாங்கள் கொண்டுவந்தோம் என்று தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது பச்சைப் பொய். எதிர்க்கட்சியும் கோரிக்கை வைக்கவில்லை, பொதுமக்களும் கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் நீட் தேர்வால் கிராமம் முதல் நகரம் வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள். அப்படி பாதிக்கப்படும் மாணாக்கர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி நல்லது செய்ய வேண்டும் அவர்கள் மருத்துவர்களாக வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த திட்டத்தை கொண்டு வந்தோம். எந்த ஒரு கோரிக்கையையும் வராமல் மக்களுக்காக யோசித்து இதை செய்தோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications