சிவகங்கையில் இளம்பெண்ணின் பெயரில்.. 246 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு! யார் இந்த எலிசபெத்?
சிவகங்கை: சிவகங்கையில் சமீபத்தில் தொல்லியல் துறையினர் கல்வெட்டு ஒன்றை கண்டு எடுத்திருக்கின்றனர். இக்கல்வெட்டு 20 வயது இளம் பெண்ணுக்காக செதுக்கப்பட்டது. யார் இந்த பெண்? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.
சமத்துவபுரம் பகுதியில் கல்வெட்டு ஒன்று கிடப்பதாக தொல்நடைக் குழுவிற்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட கல்வெட்டை கைப்பற்றி சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா, செயலாளர் இரா.நரசிம்மன் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் கிடைத்த தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

246 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு
கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இருக்கிறது. இதில் 'எலிசபெத்' எனும் இளம்பெண் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
HEAR:
LAID THE: BODY
OF: MS ELLIZA
BETH: HALMEY
ER BORNE: IN THE YE
AR OF OUR LORD 1759
THE FIRST JUNE: DIED
1779 THE 25 JULY
HEAR AGE 20 YEAR
ONE MONTH 25 DAYS
என்று இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, எலிசெபத் எனும் இளம்பெண் 1759 ஜூன் முதல் நாள் பிறந்து 1779 ஜூலை 25ஆம் நாள் மறைந்திருக்கிறார். எலிசபெத் 20 ஆண்டுகள் 1 மாதம் 25 நாட்கள் உயிர் வாழ்ந்திருக்கிறார். இவர் திருமணமானவர் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் யார் இவர்? எதற்காக சிவகங்கை வந்தார்? எப்படி உயிரிழந்தார்? என்பது பற்றி எந்த குறிப்பும் இல்லை.
சிவகங்கையில் ஆங்கிலேயர்கள்:
247 ஆண்டுகளுக்கு முன்னர் சிவகங்கையில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் இருந்தது. ஆற்காட்டு நவாப்பின் பிரதிநிதியாக ஆங்கிலேயர்கள் இங்கு செயல்பட்டிருந்தனர். இந்த காலத்தில் ஆங்கிலேயப் படைகள் சிவகங்கை பாளையத்தை கைப்பற்றியது. அதே மாதம் காளையார்கோவில் போரில் முத்து வடுகநாத தேவர் கொல்லப்பட்டார். இதற்கடுத்து 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் சிவகங்கை ராணி வேலுநாச்சியார் வசம் வருகிறது. இருப்பினும் மீண்டும் ஆங்கிலேயர்கள் இதனை கைப்பற்றினர்.
இந்த காலத்தில் ஆங்கிலேயர்கள் சிவகங்கையில் பரவலாக இருந்திருக்கின்றனர். ஆனால் உயிரிழந்த இளம்பெண் எந்த அளவுக்கு முக்கியமானவர் என்பது தெரியவில்லை.
பழைய கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தப்பட்டபோது இந்த கல்வெட்டு கொண்டுவந்து பொது இடங்களில் போடப்பட்டிருக்கிறது. எனவே இது தொடர்பான ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications