எங்க அரசியல் இனி அதிரடிதான்.. 'நிதி அமைச்சர் வாய் தான் பேசுறாரு'- மீண்டும் பிடிஆரை சீண்டிய அண்ணாமலை!
சிவகங்கை : மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மாநிலங்களில் ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் நிதி அமைச்சர் வாய் தான் பேசி வருகிறார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிடிஆரை சீண்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இனி தமிழகத்தில் எங்களது அரசியல் அதிரடியாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
குற்றவாளிகளை கைது செய்யாமல், எதிர்த்து குரல் கொடுப்பவர்களை கைது செய்கிறது திமுக அரசு. இது தொடர்ந்தால் தமிழக சிறைகள் நிரம்பும் நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் அண்ணாமலை.
போராட்டம் “ஓகே”.. தமிழகம் முழுவதுமா? இல்லை கோவையில் மட்டுமா? அண்ணாமலை அறிக்கையால் தாமரைகள் குழப்பம்
இருள் சூழ்ந்தது போல
காரைக்குடியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த பூமியில் பாஜக தேசியத் தலைவரை பேசவைப்பது பாஜகவுக்கு பெருமை. தமிழகத்தில் இருள் சூழ்ந்தது போல் திமுக சூழ்ந்துள்ளது. தமிழகத்தில் பெட்டிக்கடைகளில் கூட கஞ்சா விற்பனை ஜோராக நடக்கிறது. ஆனால் அவர்களை கைது செய்யாமல், தங்களை எதிர்த்து குரல் கொடுப்பவர்களை ஸ்டாலின் கைது செய்கிறார்.
கடைசி பாஜக தொண்டர் இருக்கும் வரை
ஆ.ராசா இந்து தாய்மார்களை கொச்சைப்படுத்தியுள்ளார். இதை எதிர்த்து குரல் கொடுத்ததற்கு 9 மாவட்டங்களில் பாஜக தொண்டர்கள் 107 பேரை கைது செய்துள்ளனர். குற்றவாளிகளை கைது செய்யாமல், எதிர்த்து குரல் கொடுப்பவர்களை கைது செய்வது தான் திராவிட மாடல் ஆட்சி. சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின். இது தொடர்ந்தால் தமிழக சிறைகள் நிரம்பும் நிலை ஏற்படும். கடைசி பாஜக தொண்டர் இருக்கும் வரை ஆ.ராசா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.
சிறைகள் நிரம்பும்
சிறைக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல. இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தியவர்கள் மண்ணுக்கு போய்விட்டனர். தவறை தட்டிக் கேட்டால் குற்றம் என்றால், தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம். இதன் மூலம் தமிழக சிறைச்சாலைகள் நிரம்பும். தமிழகத்தில் இனி எங்களது அரசியல் அதிரடியாக இருக்கும்.
ஒண்ணுமே செய்யாமல்
ஒன்றும் செய்யாமல் நம்பர் 1 முதல்வராக வர வேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறார். மிசா வழக்கில் சிறைக்கு சென்றதாக ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் அவர் வேறு எதற்காகவோ தான் சிறைக்குச் சென்றார். மின் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பேன் என்று சொல்லி வாக்கு வாங்கிவிட்டு 54 சதவீதம் உயர்த்தி விட்டனர். பால் விலையை 3 முறை உயர்த்திவிட்டனர். ஆனால் கொள்முதல் விலையை ஒரு முறை கூட உயர்த்தவில்லை.
மோடி எப்போது சொன்னார்?
ஆனால் எதற்கெடுத்தாலும் மோடியை காரணம் காட்டுகின்றனர். அவர் எப்போது உயர்த்தச் சொன்னார் சொல்லுங்கள். மோடி 10,000 நல்ல விஷயங்கள் செய்ய சொல்லி உள்ளார். அதை செய்யாமல், சொல்லாததை செய்து விட்டு, அவரை குறை சொல்கின்றனர். ஸ்டாலின் திருத்திக் கொள்ள வேண்டும், திமுகவிலேயே அதிருப்தி உள்ளது.
பிடிஆர் வாய் தான் பேசுகிறார்
மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மாநிலங்களில் ஜிஎஸ்டி வருவாய் அதிகரிக்கிறது. ஆனால் தமிழகத்தில் நிதியமைச்சர் வாய் தான் பேசி வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு எல்இடி பல்பிற்கு கூட மின்சாரத்தை தயாரிக்கவில்லை. ஆனால் மின் கட்டணத்தை உயர்த்தி மின்வாரியத்திற்கு வருவாய் வந்துள்ளதாக கூறுகின்றனர். இதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
ராகுல் காஷ்மீர் செல்வதற்குள்
ராகுல் காந்தி பாதையாத்திரையின் போது, பிரிவினைவாதிகளை சந்தித்து வருகிறார். அவரது ஷூ தேய்கிறதோ இல்லையோ, காங்கிரஸ் கட்சி தேய்ந்துவிடும். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். ராகுல் காந்தி காஷ்மீரை அடையும்போது காங்கிரஸ் கரைந்துவிடும்" எனத் தெரிவித்துள்ளார்.