ஆவின் பால் வாங்குறது இல்லை! அதனால எனக்கு பால் விலையேற்றம் குறித்து தெரியாது! கார்த்தி சிதம்பரம் ஓபன்
சிவகங்கை : நான் ஆவினிலோ தனியார் நிறுவனத்திடமோ சென்று பால் பொருட்கள் வாங்கியது இல்லை. அதனால் ஆவின் பால் பொருட்கள் விலை ஏற்றம் குறித்து எனக்குத் தெரியாது என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
கடந்த 12 ஆம் தேதி முதல் தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டு 3வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் மூலம் 1.25 கோடி லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால்ஆவின் மூலம் தினமும் 16.41 லட்சம் லிட்டர் பால் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
ஆவின் பொருட்கள் விலையேற்றம்.. பால் கொள்முதல் ரேட் ஏன் ஏறவில்லை.. அண்ணாமலை கேள்வி!
பால் விலை
பால் விற்பனையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 84 % ஆக உள்ளது. மீதமுள்ள 16% மட்டுமே அரசு நிறுவனமான ஆவினின் விற்பனையாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அவ்வப்போது தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக பால் விற்பனை விலையை உயர்த்தி வருகிறது. அதன்படி, இந்தாண்டில் மட்டும் 3வது முறையாக தனியார் பால் லிட்டருக்கு ரூ.4 விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆவின் பால்
தனியார் பால் லிட்டருக்கு ரூ.60 க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஆவின் பால் ரூ.40 முதல் ரூ.51 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் ஆவின் பாலை வாங்க தொடங்கியுள்ளனர். அதே போல் விலை உயர்வால் வீடுகளிலும் தனியார் பாலுக்கு பதிலாக ஆவின் பாலை வாங்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
கார்த்தி சிதம்பரம்
இந்நிலையில் நான் ஆவினிலோ தனியார் நிறுவனத்திடமோ சென்று பால் பொருட்கள் வாங்கியது இல்லை. அதனால் ஆவின் பால் பொருட்கள் விலை ஏற்றம் குறித்து எனக்குத் தெரியாது என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறியிருக்கிறார்.
வாங்குவதில்லை
அதில்,"ஆவின் பால் பொருட்கள் விலை ஏற்றம் குறித்து எனக்குத் தெரியாது. நான் ஆவினிலோ, தனியார் நிறுவனத்திடமோ சென்று பால் பொருட்கள் வாங்கியது இல்லை. சட்டம் தெரிந்தவர்கள் நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிப்பதில் எந்தவித தவறும் இல்லை. தமிழ்நாட்டின் பொருளாதாரம் வலுவாக இல்லை.இருப்பினும் வருமானத்திற்காக வரிகளை உயர்த்த தமிழக அரசு விரும்பாததால், மின் கட்டணம் போன்ற ஒரு சில பொருள் சேவைக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளது" என்றார்.