“டுவிஸ்ட்”.. பெரியார் சிலை அகற்றப்பட்ட இடத்தில் பேனர்! என்ன எழுதி இருக்கு? எச்.ராஜா வீட்டருகே பரபர
காரைக்குடியில் தந்தை பெரியார் சிலை அகற்றப்பட்ட இடத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி பேனரை திறந்து வைத்து இருக்கிறார்.
சிவகங்கை: காரைக்குடியில் புதிய வீட்டின் சுற்றுச் சுவருக்குள் அமைக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலையை வருவாய் துறையினர் காவல்துறையினருடன் வந்து அகற்றியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதே இடத்தில் பேனரை திறந்து வைத்து இருக்கிறார் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி.
காரைக்குடியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் திருமயம் பி.எச்.இ.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பெரியாரியவாதியான இவர் திராவிடர் விடுதலை கழகத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், காரைக்குடி அருகே கோட்டையூர் உதயம் நகரில் இளங்கோவன் புதிதாக தமிழ் இல்லம் என்ற பெயரில் சொந்தமான வீடு ஒன்றை கட்டி இருக்கிறார்.
எச்.ராஜா வீட்டருகே பெரியார் சிலை.. அகற்றிய காரைக்குடி போலீஸ்! “பாஜக ஆட்சியா?” என கொந்தளிக்கும் திவிக
தந்தை பெரியார் சிலை
தன்னுடைய வீட்டின் சுற்றுச்சுவருக்கு உள்ளே தந்தை பெரியாரின் மார்பளவு பைபர் சிலையையும் இவர் அமைத்து, அதையும் வீட்டையும் இன்று திறந்து வைப்பதற்காக திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியை அழைத்து உள்ளார். இந்த நிலையில் நேற்று காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இளங்கோவன் வீட்டிற்கு சென்று சிலையை அகற்ற கூறி இருக்கிறார்கள்.
அகற்றிய அதிகாரிகள்
இதற்கு இளங்கோவன் மற்றும் பெரியாரியவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி பெரியார் சிலையை துணியை போட்டு மூடி அதிகாரிகள் அகற்றினர். இதனை அடுத்து அங்கு காவல்துறை மற்றும் வருவாய் துறைக்கு எதிராக இளங்கோவன் மற்றும் பெரியாரியவாதிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இளங்கோவன் குற்றச்சாட்டு
இதுகுறித்து இளங்கோவன் தெரிவிக்கையில், "என்னுடைய சொந்த பட்டா இடத்தில் மதில் சுவற்றுக்கு உள்ளே தந்தை பெரியாரின் மார்பளவு பைபர் சிலையை நான் வைத்தேன். யாரையோ திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக காவல்துறையும் உள்ளாட்சி நிர்வாகமும் சேர்ந்து பெரியாரின் சிலையை அகற்றி உள்ளார்கள்.
எச்.ராஜா வீடு
எனது வீட்டிற்கும் பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவின் வீட்டிற்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே இருக்கும். தனியார் இடத்தில் சிலை வைக்கலாம் என நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக இருப்பதாக நாங்கள் காவல்துறையிடம் கூறினோம். சிலை அகற்றினால் சட்ட விரோதம் என்று சொன்னோம். மீறினால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று எச்சரித்தோம்.
காவல்துறையில் காவிகள்
நான் போலீசாரிடம் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையை வாசித்துக் காட்டியும் அவர்கள் ஏற்க மறுத்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் என்று நான் சொன்னபோது அவர் போங்க என்று தேரிவித்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று சொல்லும் போலீசார், யார் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறார்களோ அவர்களிடம்போய் பேச வேண்டும்.
காவல்துறையில் காவிகள்
காவல்துறையில் காவிகள் ஊடுருவி இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் பெரியார் மீதான காழ்புணர்ச்சியால் அதிகாரிகள் இப்படி நடக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி நடப்பதாக கூறுகிறார். ஆனால், பெரியாருக்கு சிலை வைப்பதில் இவ்வளவு மோசமாக நடந்துகொள்வார்கள் என்று நினைக்கவில்லை. ஏதோ பாஜக ஆட்சி நடப்பதைபோல் தெரிகிறது." என்றார்.
பேனர் திறப்பு
இந்த நிலையில் பெரியார் சிலை அகற்றப்பட்ட இடத்தில், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி இன்று காலை பேனரை திறந்து வைத்தார். அதில், "இந்த இடத்தில் இருந்த தந்தை பெரியார் சிலையை சட்ட விரோதமாக வருவாய்த்துறை காவல்துறை அகற்றியது" என்று எழுதப்பட்டு உள்ளது. காவல் துறை மற்றும் வருவாய்த் துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாகவும், அதே இடத்தில் பெரியார் சிலையை மீண்டும் நிறுவுவோம் எனவும் வீட்டின் உரிமையாளர் இளங்கோவன் அறிவித்து உள்ளார்.