இந்தியா vs பாகிஸ்தான்.. விராட் கோலியால் கூட காப்பாற்ற முடியாது.. கணிப்பை வெளியிட்ட ஐஐடி பாபா!
மும்பை: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் யார் வெல்வார்கள் என்ற கணிப்பை ஐஐடி பாபா வெளியிட்டுள்ளார். ஐஐடி பாபாவின் கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விராட் கோலியால் கூட இந்திய அணியை காப்பாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்றைய ஆட்டத்தில் வங்கதேச அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய அணியின் துணைக் கேப்டன் சுப்மன் கில் 101 ரன்களை விளாசி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இதன்பின் நாளை மறுநாள் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்த்து விளையாடவுள்ளது.

வழக்கம் போல் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்ட நிலையில், இரு அணிகளின் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் அணி கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்குவதால், இந்திய அணி எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற விவாதங்கள் சோசியல் மீடியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி ரசிகர்கள் இந்திய அணிக்கு ஆதரவாகவும், பாகிஸ்தான் அணி ரசிகர்கள் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாகவும் கருத்துகள் கூறி சோசியல் மீடியாவையே போர்க்களமாக மாற்றியுள்ளனர்.
இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஐஐடி பாபா கணித்துள்ளார். இதுதொடர்பான கேள்விக்கு ஐஐடி பாபா பேசுகையில், முன்பாகவே கூறிவிடுகிறேன்.. இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறாது. விராட் கோலியாலும் காப்பாற்ற முடியாது. இந்தியா ஜெயிக்காது என்று சொல்லிவிட்டேன். அதனால் இனி இந்திய அணி வெல்லப் போவதில்லை. நீங்கள் என்ன கடவுளை விட பெரியவரா? என்று தெரிவித்துள்ளார்.
ஐஐடி பாபாவின் பதில் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி பாபா என்கிற அபே சிங் மும்பை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படித்துவிட்டு கனடாவில் பணியாற்றி வந்தனர். திடீரென மிகப்பெரிய ஊதியம் பெற்று வந்த பணியை உதறித் தள்ளிவிட்டு பாபாவாக மாறி இருக்கிறார்.
இவரின் வீடியோ ட்ரெண்டான நிலையில், சோசியல் மீடியாவில் நபர் ஒருவர், "அதிகம் படித்தாலும் ஆபத்துதான் போல" என்று கருத்து பதிவிட்டுள்ளார். மேலும் 2024 டி20 உலகக்கோப்பையின் போது ஐஐடி பாபாவின் கணிப்புகள் சரியாக அமைந்தது. அதிலும் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடுகளை ரோஹித் சர்மா நம்ப வேண்டும் என்று கூறியது சரியாக பலித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications