ஹாட்ரிக் பட்டம் வெல்லும் வாய்ப்பை ஸ்ரீகாந்த் இழந்தார்
டெல்லி: காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்பால், சூப்பர் சீரியஸ் பாட்மின்டன் போட்டியான சீன ஓபன் போட்டியில் இருந்து நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெளியேறினார். இதன் மூலம், தொடர்ந்து, மூன்று சூப்பர் சீரியஸ் போட்டிகளில் பட்டம் வெல்லும் வாய்ப்பை இந்தாண்டில் இரண்டாவது முறை அவர் இழந்துள்ளார்.
பாட்மின்டன் போட்டிகளில், ஒவ்வொரு ஆண்டும், சூப்பர் சீரியஸ் பிரிவின் கீழ், 13 ஓபன் போட்டிகள் நடக்கின்றன. தற்போது சீன ஓபன் போட்டிகள் நாளை துவங்கி, 19ம் தேதி வரை நடக்க உள்ளது.

இந்தப் போட்டியில் இருந்து, சமீபத்தில் உலக தரவரிசையில் 2வது இடத்தைப் பிடித்து கிடாம்பி ஸ்ரீகாந்த் வெளியேறினார். காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்பால் இந்தப் போட்டியில் விளையாடப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார். இந்த ஆண்டில் இதுவரை நடந்துள்ள சூப்பர் சீரியர்ஸ் பாட்மின்டன் போட்டிகளில், இந்தோனேசியன் ஓபன், ஆஸ்திரேலியன் ஓபன், டென்மார்க் ஓபன் மற்றும் சமீபத்தில் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கிடாம்பி ஸ்ரீகாந்த் வென்றார்.
ஒரே ஆண்டில் நான்கு பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அவர், உலகத் தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் நடந்த சீனியர் தேசிய பாட்மின்டன் போட்டியின் பைனலில், எச்.எஸ். பிரனாயிடம் தோல்வியடைந்தார்.
தேசியப் போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக, சீனப் போட்டியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம், தொடர்ந்து மூன்று சூப்பர் சீரியஸ் பட்டம் வெல்லும் வாய்ப்பை அவர் இழந்தார்.
முன்னதாக இந்தோனேசியா, ஆஸ்திரேலியன் ஓபன் பட்டங்களை வென்ற அவர் அடுத்து நடந்த கொரிய ஓபன் போட்டியில் பட்டம் வெல்லும் வாயப்பை தவறவிட்டார். அதற்கடுத்து டென்மார்க், பிரெஞ்ச் ஓபன் பட்டங்களை வென்ற அவர், தற்போது சீன ஓபன் போட்டியில் விளையாடவில்லை. இதனால் ஹாட்ரிக் பட்டம் வெல்லும் வாய்ப்பை மீண்டும் நழுவவிட்டார்.
நவம்பர் 21 முதல் 26 வரை நடக்கும் ஹாங்காங் ஓபன் போட்டிக்கு தயாராகிவிடுவேன் என்று அவர் கூறியுள்ளார். சமீபத்தில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த ஸ்ரீகாந்த், சீன ஓபன் போட்டியில் பட்டம் வென்றால், முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பும் தற்போது பறிபோனது
சீன ஓபனில், பி.வி. சிந்து, சாய்னா நெஹ்வால், எச்.எஸ். பிரனாய் ஆகியோர் பங்கேற்பதால், அவர்கள் மூலம் இந்தியாவுக்கு மற்றொரு பட்டம் கிடைக்கும் நம்பிக்கை உள்ளது. ஸ்ரீகாந்த் வென்ற நான்கு பட்டங்களைத் தவிர, பி.வி.சிந்து இந்திய ஓபன் மற்றும் கொரிய ஓபனில் பட்டம் வென்றார், வி,. சாய்பிரனீத், சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். இதுவரை நடந்துள்ள 10 ஓபன் போட்டிகளில் இந்தியாவுக்கு, 7 பட்டம் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications