Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய பிரதமர் மோடி தலையீட்டை எதிர்க்க கூடாது-: ஈழநாடு பத்திரிகை வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்: ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் தலையீடுதான் நன்மை தரும்; ஆகையால் இந்தியாவின் தலையீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தக் கூடாது என்று ஈழநாடு நாளிதழ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஈழ நாடு நாளிதழ் எழுதியுள்ள தலையங்கம்: தமிழ் அரசியலில் இந்திய எதிர்ப்பை வெளியிடும் ஒரு தரப்பினர் இருக்கின்றனர். வெளித்தோற்றத்தில் தங்களை அவ்வாறு காண்பித்துக் கொள்ளாவிட்டாலும்கூட, சந்தர்ப்பம் கிடைக்கும்போது தங்கள் கோஷங்களை முன்வைப்பதுண்டு. தமிழ் தேசியத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து, இந்தியாவின் உதவியை நாடியதை அடிப்படையாகக் கொண்டு மீளவும் தமிழ் சூழலில் இந்திய எதிர்ப்பு கோஷங்களை சிலர் முன்வைக்க முயற்சிக்கின்றனர்.

குறிப்பாக இந்த கட்சிகளை இந்திய முகவர்களென்றும் இந்தியாவின்அடிமைகளென்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் விமர்சித்து வருகின்றனர். சீனாவின் பிடியிலிருந்து இலங்கையை இந்தியாவின் காலடியில் விழ்த்துவதற்காக தமிழர் அரசியல் பலியிடப்படுவதாகவும், முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டிருக்கின்றார். அவ்வாறாயின் இந்தியாவின் செல்வாக்கு இலங்கைத் தீவில் அதிகரிப்பதை முன்னணியினர் விரும்பவில்லையா என்னும் கேள்வி எழுகின்றது?

இந்தியா மட்டுமே

இந்தியா மட்டுமே

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் வெளிப்படையாக பேசும் ஒரேயொரு நாடு இந்தியா மட்டும்தான். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்னும் அடிப்படையில் மட்டுமே பேசிவருகின்றன. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அவர்கள் வெளிப்படையாகப் பேசுவதில்லை. அதேவேளை தமிழர்களுக்கு முழுமையாக ஆதரவாக இருக்கின்ற ஒரேயொரு வெளிநாட்டு தரப்பு என்றால் அது தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டும்தான். இந்தியா தொடர்ந்தும் ஈழத் தமிழர்கள் தொடர்பில் கரிசனை கொண்டிருப்பதற்கு தமிழ்நாடே பிரதான காரணமாகும். இவ்வாறானதொரு சூழலில், இந்திய எதிர்ப்பை ஈழத் தமிழர்கள் மத்தியில் பரப்புவது, புத்திசாலித்தனமான ஒன்றா என்னும் கேள்வியை மக்கள் தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.

இந்திய அடிமைகள் என்பதா?

இந்திய அடிமைகள் என்பதா?

13ஐ எதிர்ப்பதாக கூறுபவர்கள், தாங்கள் இந்தியாவை எதிர்க்கவில்லை - 13ஐ மட்டும்தான் எதிர்க்கின்றோமென்று வாதிடலாம். ஆனால், அது தர்க்க ரீதியில் பலமான வாதமல்ல. உண்மையிலேயே அதுதான் - அவர்களின் நிலைப்பாடு என்றால், அதனை அவர்கள் நாகரிகமாக முன்வைக்கலாம். இந்திய முகவர்கள் - இந்தியாவின் அடிமைகள் என்று கூறி இந்திய விரோதத்தை வளர்க்க வேண்டியதில்லை. 13இன் போதாமைகள் தொடர்பில் நிச்சயம் பேசத்தான் வேண்டும். ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் கீழ் அதிகாரங்கள் பகிரப்படுவதிலுள்ள சிக்கல்கள் தொடர்பில் நிச்சயம் பேசத்தான் வேண்டும். சமஷ்டித் தீர்வு ஒன்றின் மூலம் தான், தமிழ் மக்களின் உச்சபட்சமான அரசியல் அபிலாசைகளை தீர்க்க முடியுமென்பதைப் பற்றி பேசத்தான் வேண்டும். 1949இல் தமிழ் அரசு கட்சி (சமஷ்டிக்கட்சி) உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இதனைத்தான் தமிழ் தலைமைகள் கோரிவருகின்றன.

சாத்தியமில்லாது போன தனிநாடு

சாத்தியமில்லாது போன தனிநாடு

இடையில் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும்தான் தனிநாட்டுக்கான போராட்டம் இடம்பெற்றது. தனிநாட்டை இந்தியா மட்டுமல்ல உலகில் எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை. நாடுகளின் ஆதரவிருந்திருந்தால் அதனை தமிழர்கள் நிச்சயம் அடைந்திருக்க முடியும். இப்போது நிலைமைகள் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது. தமிழர்கள் முற்றிலும் வெளியாரின் தயவை மட்டுமே எதிர்பார்த்திருக்கின்ற காலம் இது. தெற்காசியாவை பொறுத்தவரையில் எந்தவொரு வெளித் தலையீடும் இந்தியாவைப் புறம்தள்ளி நிகழமுடியாது. இதனை கடந்த கால வரலாறு, நமக்கு தெளிவாக உணர்த்தியிருக்கின்றது. நிலைமைகள் இவ்வாறிருக்கின்றபோது, வீதிகளில் நின்று இந்தியாவிற்கு எதிராக கோஷம் எழுப்புவதால் தமிழினம் எதனை அடையப் போகின்றது? இவ்வாறு எதிர்ப்பு அரசியல் செய்பவர்கள் எதனை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப் போகின்றனர்?

போராட்டம் வேண்டாம்

போராட்டம் வேண்டாம்

இதுவரை இவர்கள் பெற்றுக் கொடுத்தது என்ன? எல்லோரையும் எதிர்த்துக் கொண்டு, இந்தச் சிறுதீவில், தமிழினம் எவ்வாறு வாழப் போகின்றது? எதிரிகளை அதிகரித்துக் கொண்டிருப்பதன் மூலம் - ஓர் இனம் உருப்பட்டதாக வரலாற்றில் பதிவுகள் இல்லை. தமிழர்கள் இது தொடர்பில் சிந்திக்க வேண்டும். தமிழ் சமூகத்தின் முன்னேறிய பிரிவினர் இது தொடர்பில் சாதாரண மக்களுக்கு உணர்த்த வேண்டும். இவ்வாறு ஈழநாடு தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+