'ரஜினி இலங்கை வந்திருந்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்!'
கொழும்பு: நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வந்திருந்தால், தமிழக மீனவர்களின் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்' என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சக ஆலோசகர் அந்தோணிமுத்து தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் புதிய வீடுகளைப் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி, ஏப்ரல் மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று, வீடுகளை வழங்க இருந்தார்.

ஆனால் 'ரஜினிகாந்த் இலங்கை செல்லக்கூடாது' என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் தொடர்ந்து பேசி வந்தனர். ரஜினியுடன் போனிலும் பேசி, இலங்கை போக வேண்டாம் என்று கூறியதால் ரஜினிகாந்த், தனது இலங்கைப் பயணத்தை ரத்துசெய்தார். இது தொடர்பாக உணர்ச்சிமிகுந்த அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
அதில், "இலங்கை அதிபர் மைத்திரி பாலா சிறிசேனாவைச் சந்தித்து, தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு சுமூகமான தீர்வுகாண என்னால் ஆன ஒரு முயற்சியை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தேன்," என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
ரஜினியின் இலங்கைப் பயண ரத்து முடிவை சில அரசியல் கட்சிகள் வரவேற்றாலும், பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் "ரஜினி இலங்கை செல்ல வேண்டும்... அவரால் தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரும் என்றால், அவர் இலங்கை செல்வது நல்லதுதானே," என்று கூறியுள்ளன.
இந்த நிலையில், ரஜினிகாந்த் இலங்கை வந்திருந்தால், தமிழக மீனவர் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சக ஆலோசகர் அந்தோணிமுத்து தெரிவித்துள்ளார்.
ஒரு தொலைக்காட்சி பேட்டியின்போது, "ரஜினிகாந்த் வருகை தந்து கோரிக்கை வைத்திருந்தால், இலங்கை அதிபர் நிச்சயம் நிராகரித்திருக்க மாட்டார். அரசியல் சாயம் பூசப்பட்டு, ரஜினிகாந்தின் வருகை தடுக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது," என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications