சர்வதேச விசாரணையை தவிர அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற தயார்: ராஜபக்சே
கொழும்பு: சர்வதேச விசாரணையை தவிர ஐ.நா.வின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற தயார் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே திடீரென அறிவித்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேஜி கிஹாரா, அதிபர் மகிந்த ராஜபக்சேவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, ஐநாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் எந்த வகையில் இலங்கைக்கு உதவும் என்று ஜப்பான் குழு ஒன்றை அமைத்து ஆராய்ந்திருந்தது. எனினும் இந்த தீர்மானம் இலங்கைக்கு உதவாது என்பதை ஜப்பான் பின்னர் புரிந்து கொண்டது.
இந்த நிலையிலேயே தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் ஜப்பான் கலந்துக் கொள்ளவில்லை என்று ராஜபக்சேவிடம் கிஹாரா கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த ராஜபக்ச, இதனை மற்ற நாடுகளுக்கும் தெளிவுபடுத்துமாறு கோரிக்கை வைத்ததோடு, சர்வதேச விசாரணையை தவிர ஐ.நா.வின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்ற தயார் என்றார்.
ஐ.நா.வின் கோரிக்கைகளை இலங்கை அரசு நிறைவேற்றி வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
இறுதிக் கட்டப்போரில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் பற்றி சர்வதேச விசாரணை நடத்த ஐ.நா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.