இலங்கை: 106 இடங்களைக் கைப்பற்றி ஐ.தே.க. வெற்றி...மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி 106 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும் பெரும்பான்மைக்கு 7 எம்.பி.க்கள் ஆதரவு தேவை என்பதால் ராஜபக்சே அணியைச் சேர்ந்தவர்கள் ரணிலுக்கு ஆதரவளிக்க வாய்ப்பிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவும் பிரதான வேட்பாளர்களாக களமிறங்கினர்.
196 எம்.பி.க்கள்
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 29 இடங்களுக்கு கட்சிகள் தேர்தலில் பெற்ற வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவது நடைமுறை.
தொடக்கத்தில் குழப்பம்
கடந்த திங்கள்கிழமை இரவு முதலே வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஓரிரு இடங்கள் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன. இதனால் இலங்கை அரசியலில் குழப்பம் ஏற்படுமோ என்ற நிலை உருவானது. இதன் பின்னர் நேற்று மாலை ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி முதலிடத்துக்கு வந்தது.
ரணில் கட்சி
அனைத்து தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. மொத்தமுள்ள 225 இடங்களில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 இடங்கள் கிடைத்துள்ளன. இதில் 93 இடங்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றவை; 13 இடங்கள் வாக்கு விகிதாசார அடிப்படையில் கிடைத்தவை.
ராஜபக்சே அணி
ராஜபக்சேவை முன்னிறுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு 95 இடங்கள் கிடைத்துள்ளன. இதில் 83 இடங்கள் நேரடியாக வெற்றி பெற்றவை 12 இடங்கள் வாக்கு விகிதாசார அடிப்படையில் கிடைத்தவை.
தமிழர் தரப்பு
3வது பெரும் கட்சியாக தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு 14 இடங்களில் வென்றது. வாக்கு விகிதாசார அடிப்படையில் 2 இடங்கள் என மொத்தம் 16 எம்.பி.க்கள் கிடைத்துள்ளனர்.
ஜே.வி.பி.
ஜே.வி.பி.க்கு 6, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 இடம் கிடைத்துள்ளது.
பெரும்பான்மை இல்லை
இலங்கையில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 இடங்கள்தான் கிடைத்துள்ளன. தனிப்பெரும்பான்மைக்கு இன்னும் 7 இடங்கள் தேவை. அனேகமாக ராஜபக்சே அணியில் இருந்து 7 எம்.பி.க்கள் ரணில் கட்சிக்கு தாவிவிடக் கூடும் எனத் தெரிகிறது.
பிரதமராக ரணில்
தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றி பெற்றுள்ள நிலையில் இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும்
பதவியேற்கிறார். இதன் பின்னர் அமைச்சரவையில் இடம்பெறுபவர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.