போரில் காணாமல் போனவர்கள்: கண்டுபிடிப்பு குழுவில் மேலும் 3 பேர் நியமனம்- ராஜபக்சே
கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் காணாமல் போனவர்கள் பற்றிய ஆய்வுக் குழுவில் மேலும் 3 பேர் நியமிக்கப்படுவார்கள் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு, மே 18 ஆம் தேதி உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது.
இந்தப் போரின் இறுதிக்கட்டத்தில் போர் குற்றங்கள் அரங்கேறின. அப்பாவித் தமிழர்கள் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காணாமல் போனவர்கள்:
இந்தப் போரின்போது காணாமல் போன பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பற்றி ஆராய்வதற்கு முன்னாள் நீதிபதி மேக்ஸ்வெல் பரனகாமா தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட கமிஷனை அதிபர் ராஜபக்சே அமைத்தார்.

ஆலோசனைக் குழு:
இந்தக் கமிஷனுக்கு உதவுவதற்காக 3 உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச ஆலோசனை குழுவை ராஜபக்சே கடந்த மாதம் அமைத்தார்.

பல நாட்டு பிரதிநிதிகள்:
இந்தக் குழுவில் சர் டெஸ்மாண்ட் டி சில்வா, சர் ஜெப்ரி நைஸ், பேராசிரியர் டேவிட் கிரேன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சர் டெஸ்மாண்ட் டி சில்வா, சர் ஜெப்ரி நைஸ் ஆகிய இருவரும் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள். டேவிட் கிரேன் அமெரிக்காவை சேர்ந்தவர்.

புதிதாக 3 பேர்:
இந்த நிலையில், கொழும்பு நகரில் அதிபர் ராஜபக்சே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், "காணாமல் போனவர்கள் பற்றி ஆராய்கிற 3 உறுப்பினர்கள் ஆணையத்துக்கு உதவுகிற ஆலோசனை குழுவுக்கு மேலும் 3 சர்வதேச நிபுணர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் ஆலோசனை மட்டுமே கூறுவார்கள். புலனாய்வு விசாரணை நடத்துவதற்கு அல்ல" என்று தெரிவித்துள்ளார்.

19 ஆயிரம் புகார்கள்:
காணாமல் போனவர்கள் பற்றி இதுவரை 19 ஆயிரம் புகார்கள் இலங்கையில் குவிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கால வரையறை நீட்டிப்பு:
மேலும், காணாமல் போனவர்கள் பற்றிய குழுவின் ஆய்வுக் காலமும் கிட்டதட்ட 7 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ள ராஷபக்சே காலவரையறையை அடுத்த வருடம் பிப்ரவரி 15 வரையில் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications