ராஜபக்சே எதிர்ப்பை மீறி இலங்கை சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம்.. 67 ஆண்டுக்குப் பிறகு...
கொழும்பு: இலங்கையின் சுதந்திர தின விழாவில் 67 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் பல இடங்களில் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
இலங்கையில் மைத்ரிபால- ரணில் தலைமையில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
பல்வேறு மொழிகள் பேசக் கூடிய இந்தியாவிலேயே ஒரு மொழியில்தானே தேசிய கீதம் பாடப்படுகிறது என்றெல்லாம் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் இலங்கையின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது.
இன்றைய கொண்டாட்டத்தின் தொடக்கத்தில் சிங்கள மொழியில்தான் தேசிய கீதம் பாடப்பட்டது. இதனால் ராஜபக்சே எதிர்ப்புக்கு பயந்து தமிழில் தேசிய கீதத்தை மைத்ரிபால- ரணில் அரசு பாடவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.
பின்னர் நிகழ்ச்சியின் இறுதியாக தமிழிலும் "சிறிலங்கா தாயே" என்ற தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்த தமிழ் தேசிய கீதம் 1951ஆம் ஆண்டு மட்டக்களப்பைச் சேர்ந்த புலவர் நல்லதம்பியால் எழுதப்பட்டது.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழர் பிரதிநிதிகள் பலரும் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் தமிழிலும் தேசிய கீதம் பாடியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தென்னிலங்கையில் ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தினர்.