திருச்சி ஏர்போர்ட் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்ட 1.5கிலோ தங்கம்.. வைத்தது யார்?
திருச்சி: திருச்சி விமானநிலையக் கழிவறையில் 1.5 கிலோ தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தி வருகின்ற குற்றச் செயல் அதிகரித்து வருகின்றது.
திருச்சி விமான நிலையம் பல்வேறு தென் மாவட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. மேலும் நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் போக்குவரத்து அதிகமாக உள்ள ஒரு முக்கிய சர்வதேச விமான நிலையமாகவும் உள்ளது.
மேலும் இது சர்வதேச நிலையமாக தரம் உயர்த்தப்பட்டதிலிருந்து விமான நிலையத்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதற்கு ஏற்றபடி கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக தங்க கடத்தல் சம்வங்களில் திருச்சி விமான நிலையம் சென்னையை விஞ்சும் அளவுக்கு அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தளவுக்கு தங்க கடத்தல் அதிகமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில்தான் விமான நிலையக் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.5 கிலோ அளவிலான தங்கக் கட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மதிப்பு கிட்டதட்ட 50 முதல் 60 லட்சம் ஆகும்.
மேலும், இதனைக் கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்ற சுங்கத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களையும் சோதித்து வருகின்றனர்.