1 பில்லியன் டாலர் கடன்.. மல்லையா மாதிரி அதானியும் எஸ்பிஐயை ஏமாத்திட்டா.. விஜயகாந்த் சந்தேகம்!
ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை கடனாக அதானிக்கு எஸ்பிஐ கடனாக வழங்கியுள்ளது தொடர்பாக விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: தொழிலதிபர் அதானிக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை கடனாக வழங்கி இருப்பது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இவரும் கோடிக்கணக்கில் கடன் பெற்று பின்னர் திருப்பிக் கொடுக்காமல் லண்டன் சென்றுவிட்டது போல் இவரும் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
கிங் பிஷ்ஷர் ஓனர் விஜயமல்லையா கோடிக் கணக்கில் வங்கிகளிடம் இருந்து கடன் பெற்றார். பின்னர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி கடனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் போய் தஞ்சம் புகுந்ததுள்ளார். இதில் பெரிய அளவில் கடனைக் கொடுத்து திரும்பப் பெறமுடியாமல் போன வங்கி எஸ்பிஐதான் என்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும், இதே போன்று இன்னொரு பெரிய தொழிலதிபாரான அதானிக்கு எஸ்பிஐ வங்கி கடன் கொடுத்துள்ளது இதனை கடுமையாக கண்டித்துள்ளார் விஜயகாந்த். இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தொழிலதிபர் கௌதம் அதானி கம்பெனி ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் (QUEENSLAND) என்கிற இடத்தில் சுரங்க கம்பெனி ஒன்றை தொடங்க ஆஸ்திரேலிய அரசு அனுமதி அளித்துள்ளது என்றும், இந்த நிலக்கரி சுரங்கத்தை துவங்க இந்தியாவின் முன்னணி அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (STATE BANK OF INDIA) ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனாக கொடுக்கிறது என்கிற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அச்சம்
கோடிக்கணக்கான டாலர்களில் இந்திய பணம் ஆஸ்திரேலியாவிற்கு போகிறது என்கிற அச்சம் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. காரணம் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பீட்டில் சுமார் 61,532,000,000/- இத்தனை கோடி ரூபாய் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு போவது மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் சுமார் 4000 ஆஸ்திரேலிய சுரங்க தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்பதால், இந்த சுரங்கத்தை கூடிய விரைவில் தோண்ட மீண்டும் வேலைகளை ஆரம்பிக்க ஆஸ்திரேலிய அரசு ஆர்வம் காட்ட, 2017-ல் சுரங்கம் துவங்கப்பட்டு விடும் என்று அதானி சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் ரயில் பாதை
அதுமட்டுமல்ல நிலக்கரி சுரங்கம் அமையும் இடத்திலிருந்து, ஏற்றுமதி செய்ய துறைமுகம் அமையவிருக்கும் இடத்திற்கு 400 கிலோ மீட்டர் தூரம் இருப்பதால் அதானி கம்பெனி ரெயில் பாதையும் போட போகிறது, ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க கம்பெனி GLENCORE-க்கு 13 சுரங்க கம்பெனிகள் உள்ளன. இவை நஷ்டத்தில் இயங்குவதால் 8000 ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை கொடுத்து அனுப்பி இருக்கிறது.
திரும்ப வருமா கடன்?
எனவே ஆஸ்திரேலியாவில் தற்போதைய சூழலில் மேலும் நிலக்கரி சுரங்கங்களை தோண்டுவது லாபகரமாக இருக்காது என்று துறை சம்மந்தப்பட்ட நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்த சூழ்நிலையில் 1 பில்லியன் கோடி டாலர் பணத்தை இந்தியா சார்பில் முதலீடாக போட ஒரு தனிப்பட்ட நபர் கௌதம் அதானியை நம்பி SBI கொடுப்பது அறிவுடைமையா?, ஏற்கனவே King Fisher விஜய்மல்லையாவிற்கு பல கோடி கடன் கொடுத்து, கடனை கட்டமுடியாமல் இருப்பது போல், இத்தனை கோடி ரூபாயும் கௌதம் அதானிக்கு தத்தம் செய்தால் நான்கு - ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நஷ்டம் காரணமாக சுரங்கத்தை மூடினால், அத்தனை நஷ்டமும் யார் தலையில் வந்து விடியபோகிறது.
பாவப்பட்டவர்களா இந்தியார்கள்?
பாவப்பட்ட இந்தியர்கள் தலையிலா? இதே வங்கி பணத்தை கொண்டு, இதே முயற்சிகளை இந்திய நிலக்கரி சுரங்கங்களில் மேற்கொண்டு உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளலாம். ATM வாசலிலும் வங்கி வாசலிலும், தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை எடுக்க இந்தியா முழுக்க மக்கள் அவதிப்பட்டு கொண்டுள்ளனர். மறுபுறம் கோடிக்கணக்கான இந்திய அரசு வங்கிகளில் பணம் வெளிநாடுகளில் ஒரு தனி நபரின் லாபத்திற்காக செலவிடப்படுவது உண்மையிலையே கண்டிக்கதக்கது.
அதானியும் டிமிக்கி கொடுப்பார்
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று சொல்லுவார்கள் அதுபோல அதானிகளும், விஜய்மல்லையா போன்ற பெரும் பண முதலைகள் இந்திய மக்களின் பணத்தை வங்கிகள் மூலம் பயன்படுத்தி கொண்டு, பிறகு நஷ்டமாகி விட்டது என்று வெளிநாடுகளுக்கு தப்பி சென்று தஞ்சம் அடைந்து விடுவதற்கு முன்பு அரசாங்கம் விழித்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் சம உரிமை, சமவாழ்வு, ஏற்படுத்தும் நல்லரசாக நம் நாடு வர வேண்டும். அப்போது தான் இந்தியா வல்லரசு நாடாகும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.