மவுசு குறையாத ஆர்.கே. நகர் தொகுதி.. இடைத் தேர்தலில் 10 கட்சிகள் களத்தில்… படுஜோர் போட்டி
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. 10 கட்சிகள் இங்க போட்டியிட உள்ளன.
ஜெயலலிதா போட்டியிட்ட உடன் ஆர்.கே. நகர் சென்னையின் நட்சத்திர தொகுதியாக மாறிவிட்டது. தற்போது அவர் இறந்ததையடுத்து ஏற்பட்ட காலி இடத்தை நிரப்ப அதே நட்சத்திர அந்தஸ்து குறையாமல் கட்சிகள் இடைத் தேர்தலில் களம் இறங்க தயாராகி வருகின்றன.
1977ம் ஆண்டுதான் இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற முதல் தேர்தலில் திமுக, அதிமுக, ஜனதா, இந்திரா காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகள் மோதின. கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 6 முனை போட்டியை ஆர்.கே. நகர் சந்தித்தது.
அதிமுகவும் திமுகவும்
தமிழகத்தில் தேர்தல் என்றாலே அது திமுகவிற்கும் அதிமுகவிற்கும்தான் என்பதை கடந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நமக்கு தெளிவாக உணர்த்தின. அதே போன்று இந்த தேர்தலிலும் ஆளும் கட்சியான அதிமுக மற்றும் திமுகவிற்குத்தான் கடும் போட்டி.
களத்தில் ஓபிஎஸ் அணி
அதிமுக இரண்டாக பிளந்து ஓபிஎஸ் அணியாகவும், சசிகலா அணியாக சண்டையிட்டு வருகின்றன. இந்த இரண்டு அணிகளும் தனித்தனியாக தங்களது வேட்பாளர்களை களத்தில் இறக்க தயாராகி வருகின்றன.
திடீர் தீபா
ஜெயலலிதா மறைந்ததால் திடீரென்று அரசியலில் குதித்துள்ள தீபாவும் ஆர்.கே. நகரில் போட்டியிடுவதாக அத்தை செத்த உடனேயே அறிவித்துவிட்டார். ஜெயலலிதா போல் உருவச்சாயல் உள்ள தன்னை மக்கள் ஜெயிக்க வைத்துவிடுவார்கள் என்ற கனவோடு களம் இறங்குகிறார் தீபா.
டீம்ல இருக்கோம்..
இந்த இடைத்தேர்தலில் பாஜகவும் போட்டியிட முடிவு செய்துள்ளது. கடந்த தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து பாஜக இந்தத் தொகுதியில் போட்டியிட்டது போன்று இந்த தேர்தலிலும் போட்டியிடுவது உறுதி என்று மாநில தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
சும்மாங்காட்டியும்…
தேமுதிகவை கடந்த சட்டசபைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மேலும், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் ஆகிய இடைத்தேர்தல்களிலும் மோசமான தோல்வியையே சந்தித்தது. குப்புற விழுந்தாலும், எழுந்து நின்று தேர்தலில் நிற்கத் தயாராகி வருகிறார் விஜயகாந்த்.
இதுதவிர..
பாமகவும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் வேட்பாளரை நிறுத்த அதன் தலைவர்கள் தயாராகிவிட்டனர். அப்புறம் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று சீமானும் அறிவித்துவிட்டார்.
இதுவரை நடைபெற்ற தேர்தலின் அடிப்படையில் இந்தத் தொகுதியில் எத்தனைக் கட்சிகள் போட்டியிட்டாலும் அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.