அரியலூர் அரசு விடுதியில் இருந்து காணாமல் போன மாணவன்... ஆட்சியரை முற்றுகையிட்ட பெற்றோர்!
Recommended Video
அரியலூர்: அரசு விளையாட்டு விடுதியிலிருந்து காணாமல் போன 10ஆம் வகுப்பு மாணவனை கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை முறையிட்டு வெளியேற மறுத்ததால் பரபரப்பு.
அரியலூரில் உள்ள விளையாட்டு மாணவர்கள் விடுதியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி விளையாட்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகினறனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் மருதுபாண்டி விளையாட்டு விடுதியில் தங்கி 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி முதல் மாணவன் மருதுபாண்டியை காணவில்லை. இது குறித்து அரியலூர் காவல் நிலையத்தில் மருதுபாண்டியின் பெற்றோர் புகார் செய்தனர். புகார் செய்து 10 நாட்களாகியும் மாணவனை கண்டுபிடித்து தராததால் ஆத்திரமடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமியிடம் மனு அளித்தனர்.
மாணவனை கண்டுபிடித்து தரும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என கூறி கூட்டரங்கிலேயே அமர்ந்து கூட்ட அரங்கினை விட்டு வெளியே செல்ல மறுத்தனர். இதனையடுத்து காணாமல் போன மாணவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் அங்கிருந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியின் அறிவுறுத்தலின் பேரில் அரியலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ் மாணவனின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 2 நாட்களில் மாணவனை கண்டுபிடித்து தருகிறோம் எனக் கூறியனர். ஆனால் பெற்றோர்கள் காணமல் போன மாணவன் மருதுபாண்டி 10வகுப்பு படித்து வருவதால் பொது தேர்வு தொடங்கஉள்ள நிலையில் மாணவனை 24மணி நேரத்தில் கண்டுபிடித்து தர வேண்டும் என கூறிவிட்டு கலைந்து சென்றனர்.