என்ன ஜென்மங்களோ இவங்க.. இப்படியா அடிப்பது?
11-ம் வகுப்பு மாணவனை சக மாணவனின் பெற்றோர் கட்டி வைத்து உதைத்துள்ளனர்.
Recommended Video
சென்னை: ஒருவரை அடிக்கும் தார்மீக உரிமை இந்த உலகில் யாருக்குமே கிடையாது!
அப்படி இருக்கும்போது, தவறு இழைக்காத ஒருவரை ஒட்டுமொத்த கும்பலும் சுற்றிக் கொண்டு கட்டி வைத்து அடிக்கும் வழக்கம் எவ்வளவு கொடுமையானது... அதிலும் தவறே இழைக்காத அந்த நபர், ஒரு பள்ளி மாணவன் என்பதுதான் உச்சக்கட்ட கொடூரம்! மனசாட்சியும், ஈரமும், மனிதாபிமானமும், நியாய தர்மமும் இல்லாதவர்கள் நடந்து கொண்ட அரக்க சம்பவம்தான் இது!
கிண்டல், கேலி
ஆம்பூர் அடுத்த கோணாமலை என்ற பகுதியில் வசித்து வருபவர் உத்திரமேரூர். இவரது மகன் தினேஷ் என்பவர் மாதனூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் தன்னுடன் ஒரே வகுப்பில் படிக்கும் சக மாணவர்களான தயாளன், பரத், சாரதி என்ற 3 பேரும் தினேஷை கண்டமேனிக்கு கிண்டலும் கேலியும் செய்துள்ளனர்.
ஆசிரியரின் அறிவுரை
கேலி, கிண்டல் செய்ததால் அவமானமும், வேதனையும் அடைந்தாலும் மாணவர் தினேஷ் சக நண்பர்களிடம் சண்டைக்கு போகவில்லை, ஏன் என்னை இப்படி கிண்டல் செய்கிறீர்கள் என்றும் கேட்கவில்லை. ஆனால் நேராக தன் ஆசிரியையிடம் சென்று முறையிட்டான். தினேஷ் தரப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்த ஆசிரியரும், அந்த 3 பேரையும் அழைத்தார். "ஏன் இப்படி தினேஷை கிண்டல் செய்றீங்க? இனி இதுபோல் நடந்து கொள்ளக்கூடாது" என்று அறிவுரை சொன்னார்.
3 பேரும் தாக்கினர்
டீச்சரிடம் போய் தங்களை போட்டுக் கொடுத்து விட்டதாக நினைத்த 3 மாணவர்களுக்கும் தினேஷ் மீது ஆத்திரம் இன்னும் ஏறியது. அதனால் 'பள்ளி முடியட்டும், அவனை பார்த்துக்கலாம்' என்று மாலை வரை காத்திருந்தனர். அதன்படி பள்ளி முடிந்ததும், தினேஷ் வீட்டுக்கு கிளம்பினான். ஏற்கனவே காத்திருந்த 3 பேரும் தினேஷை ரவுண்டு கட்டிக் கொண்டு சரமாரியாக தாக்கினர். 3 பேரும் ஒரே நேரத்தில் தாக்கியதால் நிலைகுலைந்த தினேஷ், வலி பொறுக்க முடியாமல் அவர்களிடமிருந்து தப்பி வீட்டுக்கு ஓடினான்.
மடக்கி பிடித்தனர்
தினேஷ் வீட்டுக்கு போகும்வழியில் பட்டுவாம்பட்டி என்ற ஊர் வருகிறது. அதை தாண்டிதான் போக அவன் வீட்டுக்கு போக வேண்டும். பட்டுவாம்பட்டியில் நுழைந்ததுமே 3 பேரில் ஒருவனான தயாளன் என்ற மாணவனின் பெற்றோர் தினேஷை வழிமறித்தனர். தயாளனின் அப்பா, அம்மா, உறவினர்கள் சிங்காரம், முனிராஜ் தினேஷை மடக்கி பிடித்தனர்.
ஐயோ... வலிக்குதே....
அத்துடன் அங்கிருந்த ஒரு மின்சார கம்பத்தில் கயிற்றினால் கட்டி வைத்தனர். பிறகு துடைப்பம், செருப்புகளால் தினேஷை கடுமையாக தாக்கினர். ஏற்கனவே 3 பேர் அடித்த வலி தாங்காமலேயே தினேஷ் தப்பி வந்தால்... இப்போது இத்தனை பேர் சேர்ந்து மொத்தமாக அடித்து துவைத்ததில் தினேஷ் கதறி துடித்தான்... வலியால் தொண்டை கிழிய "ஐயோ... வலிக்குதே" என அலறினான். உடலெங்கும் தினேஷூக்கு ரத்தம் வழிந்தோடியது.
தினேஷை மீட்டனர்
தினேஷின் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்து தினேஷை மீட்டனர். பின்னர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து அவனது வீட்டுக்கும் தகவல் அளித்தனர். இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ன தவறு செய்துவிட்டான்?
இவர்கள் எல்லாம் மனிதர்கள்தானா? தன் மகனின் வயதுதானே இந்த தினேஷூக்கும்? எப்படி இந்த பிஞ்சினை அடிக்க மனம் வந்திருக்கும்? 16-வயது பிள்ளையிடம் வீரத்தை காட்ட இத்தனை பேர் கூடி வந்து தாக்குவது சரிதானா? அப்படி தினேஷ் செய்த தவறுதான் என்ன? திருட்டா? கொலையா? கற்பழிப்பா?
திராணியற்ற ஜென்மங்கள்
நாட்டில் எத்தனையோ பேர் கொலைகளையும், ஊழல்களையும், செய்துவிட்டு தலைநிமிர்ந்து நடந்து கொண்டிருக்கிறார்கள்... இவர்களையெல்லாம் கேட்க திராணியற்ற மனித ஜென்மங்கள், போயும் போயும் ஒரு மாணவனிடத்தில் தங்கள் வலிமையை காட்ட நினைப்பது வெட்கக்கேடு. இந்தக் கும்பல் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.