தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 131 பேர் வேட்புமனு தாக்கல்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஒரே நாளில் தமிழகத்தில் 131 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 29ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நேற்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக வேட்பாளர்களில் பலர் தங்கள் மனைவி, மகன் மற்றும் மகளை மாற்று வேட்பாளராக குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவர்களின் பெயர்களில் மாற்று வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதிமுகவினரை தவிர்த்து விருதுநகரில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஈரோட்டில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, குமரியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், தென் சென்னையில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், திருச்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மு. அன்பழகன், ஆரணியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர். சிவானந்தம் ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் துவங்கிய நாளான மார்ச் 29ம் தேதி 67 பேரும், நேற்று 131 பேரும் என இரண்டு நாட்களில் 198 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை(உகாதி) ஆகிய தினங்கள் விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.