150 ஆண்டுகள் பழமையான செட்டிநாடு வீட்டில் “தீ” – காரைக்குடி அருகே பரபரப்பு
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ள ஓனா சிறுவயல் கிராமத்தில் 150 ஆண்டுகள் பழமையான வீடு ஒன்றில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பதட்டத்தினை ஏற்படுத்தியுள்ளது.
"செட்டிநாடு" என்று அழைக்கப்படும் காரைக்குடியிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பழமையான கட்டுமானம் கொண்ட வீடுகள் அதிக அளவில் அமைந்துள்ளன.
அனைத்துமே கிட்டத்தட்ட 100, 150 ஆண்டு என மிகவும் பழமையான, அதே சமயம் கம்பீரமான கட்டடக் கலையின் வெளிப்பாடாக அமைந்துள்ள வீடுகளாகும். அப்படிபட்ட 150 ஆண்டுகள் பழமையான வீடு ஒன்றில்தான் இந்த தீவிபத்து இன்று முற்பகலில் ஏற்பட்டுள்ளது.
காரைக்குடியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் ஓனா சிறுவயலில் இருந்து ஆத்தங்குடி செல்லும் சாலைக்கருகே அமைந்துள்ள இந்த வீடு, சேதுராமன் செட்டியார் என்பவருக்கு சொந்தமானது. தற்போது கல்யாண மண்டபமாக செயல்பட்டு வரும் இவ்வீட்டில்தான் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இத்தீவிபத்தினால் கிட்டதட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
செட்டிநாடு கட்டுமானம் கொண்ட மிகப்பெரிய வீடு என்பதால் பரவிவரும் தீயினை அணைக்க காரைக்குடி சரக தீயணைப்பு வீரர்கள் மூன்று தீயணைப்பு வண்டிகளுடன் போராடி 2 மணி நேரம் கழித்து தீயினைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீப்பிடித்ததற்கான முழுமையான காரணங்கள் இன்னும் தெரியவில்லை என்பதும், மின்சார பழுதினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.