தூத்துக்குடி அனல்மின்நிலைய விபத்து: 2 பேர் பலி - ஒப்பந்த தொழிலாளர்கள் ஸ்டிரைக்
சென்னை: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 2 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா. 25 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி, ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5வது கொதிகலன் பிரிவில் கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிறன்று கொதிகல்ன் திடீரென வெடித்து சிதறியுள்ளது.
இந்த விபத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்கள் இதில் சிக்கிக்கொண்டனர். இதில் 2பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சில தொழிலாளர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் கோரிக்கையாகும். பலியான தொழிலாளர்களது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் மற்றும் அனல் மின் நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் தற்போது வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
கோரிக்கையை வலியுறுத்தி, 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அனல் மின் நிலைய வாயிலில் அமர்ந்து, முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக, குவிக்கப்பட்டுள்ளனர்.